எப்பம்மா வருவீங்க... அழுத கண்களுடன் சாலையோரம் காத்திருக்கும் அதிமுகவினர்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் தொடர்ந்து அதிமுகவினர் குவிந்தவண்ணம் உள்ளனர்.
அமைச்சர்களும், அதிமுக பிரபலங்களும் மருத்துவமனைக்கு வந்தாலும் கூட யாருக்கும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி கிடைப்பதில்லை. இதனால் மருத்துவமனை வரை வந்து வந்து திரும்புகின்றனர்.
அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து சாலையோரம் காத்துக் கிடக்கின்றனர். பலர் அழுதபடி காத்திருப்பதைக் காண முடிகிறது. சீக்கிரம் ஜெயலலிதா உடல் நலம் சரியாகி வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்தபடி காணப்படுகின்றனர்.
வியாழக்கிழமை இரவு
வியாழக்கிழமை இரவு திடீரென முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுகவீனம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவு
அவரது உடல் நிலை மிகவும் கவலைப்படும் படி இருந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அதில் அவர் குணமடையவே தற்போது வழக்கமான சாப்பாட்டுக்கு அவர் மாறியுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
தொடர்ந்து குவியும் அதிமுகவினர்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியது முதலே மருத்துவமனை முன்பு அதிமுகவினர் குவியத் தொடங்கி விட்டனர். இப்போது வரை கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து அதிமுகவினர் பிளாட்பாரங்களில் அமர்ந்தும், நின்றபடியும் ஜெயலலிதா குறித்துப் பேசியபடி காணப்படுகின்றனர்.
யாருக்கும் அனுமதி இல்லை
ஜெயலலிதாவைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. அமைச்சர்களுக்கே கூட அனுமதி இல்லாததால் அவர்களாலும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாத நிலை. இதனால் அனைவருமே ஜெயலலிதாவை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.
நடிகர்கள்
நடிகர்கள் சரத்குமார், தியாகு, ராமராஜன், போண்டா மணி, சி.ஆர். சரஸ்வதி என பலரும் கூட ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வரை வந்து சோகமாக காத்திருந்து விட்டுத் திரும்பியுள்ளனர். தொடர்ந்து பலரும் வந்தபடி உள்ளதால் அப்பல்லோ உள்ள பகுதியே தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.
இன்றும் கூட்டம் குவிந்தது
3வது நாளான இன்றும் சபாநாயகர் தனபால், சின்னையா, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர். ஆனால் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. தம்பித்துரைக்கு மட்டும் உள்ளே வரை செல்ல அனுமதி கிடைத்தது.