அதிமுக தலைமை அலுவலகம் 6 மாதத்திற்குப் பிறகு களைகட்டியது- உற்சாகத்தில் தொண்டர்கள்
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் 6 மாதத்திற்குப் பிறகு களைகட்டியுள்ளது. தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அணிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள் கட்சி, நிர்வாகிகள் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் களைகட்டியுள்ளதால் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் அதிமுக அலுவலகம் வரலாம் என்று தகவல் வெளியானதை முன்னிட்டு தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அணிகள் ஆகிய இரண்டு தரப்பின் ஆலோசனைகள் முடிந்த பிறகு, இன்று இரண்டு தலைவர்களும் இங்கே வந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டர்கள் குவிந்தனர்
இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் எடுத்துக் கொண்டால் காலையில் இருந்தே தமிழகம் முழுவதும் தலைமை கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் வந்து குவிந்துக் கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
கொண்டாட்ட மனநிலை
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகிறார்கள் என்றாரே தொண்டர்கள் கூட்டம் அலைமோதும். அதிமுக பிறந்தநாள், எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாளில் கொண்டாட்டங்கள் களைகட்டும். இன்று அதே மனநிலைக்கு தொண்டர்கள் வந்துள்ளனர்.
பிளவும் இணைப்பும்
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. அணிகளும் மூன்றாக பிளவு படவே, யாருக்கு அதிமுக தலைமை அலுவலகம் என்ற கேள்வி எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவே, ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் அதிமுக அலுவலகத்திற்கு வரவேயில்லை.
3 அணியினரும் குவிகின்றனர்
ஓபிஎஸ் அணியினர், ஈபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திரண்டு வரும் நிலையில் டிடிவி தினகரனால் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர். கூட்டம் அலைமோதுவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
களைகட்டும் அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம் 6 மாதத்திற்குப் பிறகு களைகட்டியுள்ளது. சிறு சிறு வியாபாரிகள் மீண்டும் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் உள்ள சாலை தொண்டர்களால் நிரம்பியுள்ளது. அங்குள்ள உணவகங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.