கோடையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் மோர், தண்ணீர் பந்தல்.. அதிமுக ஏற்பாடு
கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
சென்னை : கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவிட்டார்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக நிர்வாகிகள், நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் மறக்காமல், சில மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீர் , மோர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
அதன்படி தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைத்து வருகின்றனர். சில பகுதிகளில் திறப்புவிழா நடத்தி செயல்பபடுத்தியும் வருகின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி, இளநீர்
அதன்படி அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். சில பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
டிடிவி தினகரனின் உத்தரவு
இந்த ஆண்டும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை அதிமுக நிர்வாகிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாகவே நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
ஓ.பி.எஸ் அணியின் உத்தரவு
அதே போன்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அதற்கும் அந்த கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.