தமிழகத்துக்கு ஜெயலலிதா முக்கியம்.. "அம்மா" மீண்டும் நலம் பெறுவார்.. தொண்டர்கள் பிரார்த்தனை!
சென்னை: தமிழகத்திற்கு முதல்வர் அம்மா ரொம்ப முக்கியம். அம்மா பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை முன்பு தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகமே கர்நாடகத்திடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவினால் மட்டுமே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
காவிரி பிரச்சினை
காவிரிப் பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு முக்கியச் சம்பவமும் ஜெயலிதா காலத்தில்தான் நடந்துள்ளது. அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் மூலமாகத்தான் காவிரியில் தமிழகத்தின் உரிமை ஒவவொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்போது கூட தமிழகத்திற்குப் பெரும் பலன் அளிக்கக் கூடிய காவரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் காரணம், ஜெயலலிதா அரசு தொடர்ந்த வழக்கே காரணம்.
அம்மா முக்கியம்
காவிரி மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையிலும் கூட ஜெயலலிதாவின் சட்டப் போராட்டம்தான் தமிழகத்திற்கு வெற்றி தேடித் தந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா உடல் நலத்துடன் தெம்போடு இருப்பது அவருக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் முக்கியமானது என்று அதிமுகவினர் உருக்கமாக கூறுகின்றனர்.
பூரண குணமடைவார்
மருத்துவமனை வாசல் முன்பு செய்தி தொடர்பாளர்கள் வைகைச் செல்வன், சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பதிலளித்து வருகின்றனர். ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தொண்டர்கள் பிராத்தனை
ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் மருத்துவமனை வாசலில் குவிந்திருக்கும் தொண்டர்கள் விடிய விடிய ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.