அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை தேர்ந்தெடுக்க கூடாது- அதிமுக தொண்டர்கள் போர்க்கொடி
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அன்று இரவே, தமி ழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது.
அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 3ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அதன்படி, 1989ம் ஆண்டு தொடங்கி, கடந்த 7 முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் அழைக்கப்பட்டார் ஜெயலலிதா.
அதிமுக பொதுச்செயலாளர் யார்?
பொதுச் செயலாளர் பதவி மிகவும் அதிகாரம் வாய்ந்தது என்பதால், அப்பதவியைக் கைப் பற்ற சசிகலா தீவிர முயற்சியி்ல் இறங்கியுள்ளார். இதற்காக, முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார் சசிகலா.
ஆதரவு திரட்டிய சசிகலா
அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களில் பலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் தேர்வானவர்கள். எனவே, அவர்களில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். சசிகலாவை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்கள் எதிர்ப்பு
அதே நேரத்தில் ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் சசிகலாவுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் சசிகலா எதிர்ப்பு கருத்துகளையே அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.
ஆதரவு அலை
எப்படியாவது பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சசிகலா, கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தன் மீதான ஆதரவு அலையை உருவாக்குமாறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளிடம் கூறவே, இன்று செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், சைதை துரைசாமி, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட எராளமான நிர்வாகிகள் போயஸ்தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்து கட்சிக்கு தலைமை ஏற்குமாறு வலியுறுத்தினார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பு
ஜெயா டிவியில் இந்த சந்திப்பு வெளியானதோடு, நிர்வாகிகளின் பேச்சும் உடனுக்குடன் ஒளிபரப்பானது. இந்த நிலையில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யக்கூடாது என்று ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்கள் சாலை மறியல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டம் அருகே பின்னி சாலையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை தேர்ந்தெடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போஸ்டருக்கு எதிர்ப்பு
திருவொற்றியூரில் சசிகலாவுக்கு அதரவு தெரிவித்து புகழேந்தி என்பவர் பேனர் வைத்திருந்தார். அதில், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிமுக-வை வழிநடத்தி செல்வது குறித்தும், சசிகலாவை 'சின்னம்மா' என்று குறிப்பிட்டும் அதில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை கண்டித்து, திருவொற்றியூர் அதிமுக மகளிர் அணியினர் உடனடியாக அந்த பேனரை அகற்ற கோரியும், ஜெயலலிதாவுக்கு சகோதரியாகவும், தாயாகவும் இருந்ததாக சும்மானாலும் சசிகலா கூறுவதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறி கண்டனம் தெரிவித்தனர். அப்போது, பேனரை வைத்த நபரிடம், பேனரை அகற்றுவது குறித்து வாக்குவாதம் நடத்தினர். மேலும், ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை அனுமதிக்க முடியாது என்று கூறி சாலை மறியல் செய்தனர்.
ரகசிய ஆலோசனை
அதிமுக தொண்டர்கள், மகளிர் அணியின் எதிர்ப்பை அறிந்த சசிகலாவும், அவரது உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மிக எளிதாக அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என நினைத்த மன்னார்குடி குடும்பத்தினர் அடுத்து நடவடிக்கை எடுப்பது என்று ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்ட வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.