ஜெ. உடல்நலம் குறித்து பஞ்ச் டயலாக் பேசிய நாஞ்சில் சம்பத்... கடுப்பில் அதிமுக நிர்வாகிகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பஞ்ச் டயலாக் பேசிய நாஞ்சில் சம்பத் மீது அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் மருத்துவமனைக்குள் சென்று சசிகலா உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
மேலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் 'அம்மா' இருக்கிறார்.... 'அம்மாவின்' கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது பஞ்ச் டயலாக் பேசினார். ஜெயலலிதா உடல்நலம் குன்றியுள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் பஞ்ச் டயலாக் பேசியது அதிமுக நிர்வாகிகளை முகம் சுழிக்க வைத்தது.