அரவக்குறிச்சி -செந்தில்பாலாஜி, தஞ்சை- ரெங்கசாமி, திருப்பரங்குன்றம்- ஏ.கே. போஸ்: அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி போட்டியிடுகிறார். இதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல புகார்கள் வந்தன.இதனை தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேல் எம்.எல்.ஏ மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.இதனை தொடர்ந்து அந்த தொகுதியிலும் காலியிடம் ஏற்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதித்தேதி நவம்பர் 2.நவம்பர் 5ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே திமுக விருப்பமனு பெறப் போவதாக அறிவித்தது. 21ம் தேதி நேர்காணல் நடத்த உள்ளது திமுக.
அதே நேரத்தில் அதிமுக முந்தைய வேட்பாளர்களையே மீண்டும் அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றத்திற்கு மட்டும் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி போட்டியிடுகிறார். இதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகிறார் என்று அதிமுக அறிவித்துள்ளது.