டிஜிபி நடராஜ், கராத்தே தியாகராஜன், சிவ சக்திவேல் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முன்னாள் டிஜிபி நடராஜ், காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன், வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் சிவ சக்திவேல் கவுண்டர் ஆகியோரின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக சர்ச்சை எழுந்ததால் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது, இதில் மாநிலம் முழுவதும் 6,319 ஆண்கள், 787 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இரண்டு தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர் தலைமையில் இந்த பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனு பரிசீலனை முழுவதும் வீடியோ மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்கப்படுகிறது.
சென்னை ஆர்.கே. நகரில் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சங்கரன்கோவில் தொகுதியில் 20 பேரும், வாசுதேவநல்லூரில் 17 பேரும், கடையநல்லூரில் 28 பேரும், தென்காசியில் 24 பேரும், ஆலங்குளத்தில் 19 பேரும், நெல்லையில் 27 பேரும், அம்பையில் 26 பேரும், பாளையில் 30 பேரும், நாங்குநேரியில் 23 பேரும், ராதாபுரத்தில் 22 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்து காண்பித்தாக சர்ச்சை எழுந்ததை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்ட பின்னர் அப்பாவுவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 236 வேட்பாளர்கள் 311 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் தகுதியான வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்படுகின்றன. தகுதியில்லாத மனுக்கள், கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேடசந்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவ சக்திவேல் கவுண்டர் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் தனது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன் மீதான வழக்கை குறிப்பிடவில்லை என்பதால் மனுவை ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேடசந்தூர் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி கரூர் மாவட்ட செயலாளர் நியாமத்அலி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளதால் அவரது மனு ஏற்கப்படுமா? தள்ளுபடி செய்யப்படுமா என்பது திங்கட்கிழமை தெரியவரும்.