டேபிள், சேரைத் தூக்கி வீசி அடித்து கட்டி உருண்ட அதிமுக கவுன்சிலர்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்டத்தில் கோஷ்டி மோதல் வெடித்தது. அதிமுக கவுன்சிலர்கள் இரு பிரிவாக பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த ரகளையில் 3 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தங்கமுத்து. இவரது தலைமையில் கூட்டம் நடந்தது. அப்போது துணைத் தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் ஒரு பிரிவு அதிமுக கவுன்சிலர்கள் திட்டப் பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்து பிரச்சினையைக் கிளப்பினர்.
இதற்குத் தலைவர் தங்கமுத்து ஆதரவு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் வெளியிலிருந்து சிலர் உள்ளே புகுந்தனர். இரு தரப்பும் சரியான சண்டையில் இறங்கினர். டேபிள், சேர்களைத் தூக்கி பலமாக தாக்கிக் கொண்டனர்.
போர்க்களமாக மாறிப் போனது கூட்ட அரங்கம். இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவனைக்குக் கொண்டு போனார்கள். இந்த மோதலால் நகராட்சிக் கூட்டம் ரத்தாகிப் போனது.