அய்யா எனக்கு வீடே இல்லை... நீதிபதிக்கு அதிர்ச்சி கொடுத்த '12 பங்களா' அதிமுக கவுன்சிலர்!
சென்னையில் 12 பங்களாக்களை வைத்துள்ள கவுன்சிலர் ஒரு வீடு கூட இல்லை என வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னையை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ஒருவர் 12 சொகுசு பங்களாக்களை வைத்துக்கொண்டு தனக்கு ஒரு வீடு கூட இல்லை என வேட்புமனுவில் பொய்யான தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களின் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் ஆணையிட்டுள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் தங்கள் பகுதி அதிமுக கவுன்சிலரான அண்ணாமலை என்பவர் 12 வீடுகளை தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் வைத்துள்ளார். ஆனால் அதற்கு சொத்து வரியாக ரூ.55 மற்றும் ரூ.110 என சொற்ப தொகைகளையே செலுத்தி வருகிறார். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் கடந்த 2006 முதல் 2016ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்களாக இருந்தவர்களின சொத்து விவரங்ளை தாக்க்ல செய்யவும், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற இருந்த கவுன்சிலர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி கிருபாகரன் முன்பு நடந்தது. அப்போது கடந்த முறை கவுன்சிலராக பதவி வகித்த அண்ணாமலை இம்முறை மீண்டும் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு சொநதமாக ஒரு வீடு கூட இல்லை என்றும் 2 வங்கிகளில் கணக்கு உள்ளது என்றும் ஒரு ஸ்கார்பியோ கார் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி 12 வீடுகளுக்கு சொந்தக்காரரான கவுன்விலர் அண்ணாமலை தனக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை என குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அவர் தனது வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையம் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்றார்.
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், பொதுவாக இதுபோல பொய்யான தகவல் அளிப்பவர்களுக்கு எதிராக புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உடனே நீதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக புகார் வரட்டும் என தேர்தல் ஆணையம் காத்திருக்கக்கூடாத. வேட்பு மனுக்கள் சம்பிரதாயத்துக்காக மட்டுமே தாக்கல் செய்யப்படுகின்றன. வேட்பாளர்கள் தரும் தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து குறைந்தபட்சம் அப்பகுதி வட்டாட்சியரிடமாவது சரிபார்க்கலாமே என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, கவுன்சிலர் அண்ணாமலை வைத்துள்ள பங்களாக்களில் பல சதுப்பு நிலத்திலும், அரசு புறம்போக்கு நிலத்திலும் உள்ளன. இதனால் மனுதாரருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 2006 முதல் அனைத்து கவுன்சிலர்களின் சொத்து விவரப் பட்டியலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால். இதை பொதுநல வழக்காக கருதி இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தலைமை நீதிபதியின்அமர்வுக்கு மாற்றுகிறது. அதேபோல் மனுதாரருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆணையருக்கு உத்தரவிடுகிறேன். கவுன்சிலர் அண்ணாமலை 12 பங்களாக்கள் வாங்க அவருக்கு எப்படி பணம் வந்தது? என்பதை குற்றவியல் நடவடிக்கையாக கருதி போலீசார் விசாரிக்க வேண்டியள்ளது. அதற்காக இந்த வழக்கில் டிஜிபியையும் எதிர்மனுதாராக சேர்க்கிறேன் என உத்தரவிட்டார்.