முடிவில்லாமல் முடிந்த பேச்சுவார்த்தை... அணிகள் இணைப்பில் தொடரும் தாமதம்!
கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்புகளை பகிர்வதில் அதிமுகவின் இரு அணிகளிடையே இறுதி பேச்சுவார்த்தை தொடருவதால் இணைப்பில் தாமதம் நீடிக்கிறது.
சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தாமதமாவதற்கு பதவி மற்றும் பொறுப்புகளை பிரித்துக் கொள்வதில் இருக்கும் சில முரண்பாடுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு ஜெயலலிதா சமாதியில் 7.30 மணியளவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. முதல்வர் பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரமாக நடந்த இந்த ஆலோசனையில் இரு அணிகள் இணைந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆலோசனைக் கூட்டம் முடிந்து அமைச்சர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதே போன்று ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையும் முடிநத்துள்ளதாக தெரிகிறது. இரு அணிகள் நடத்திய ஆலோசனையில் கட்சியில் யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு, ஓ.பிஎஸ் தரப்பில் இருந்து யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது என்றும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இரு அணிக்கும் இடையே முரணான கருத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஜெயலலிதா சமாதியில் இரு அணிகள் இணைவதில் காலதாமதவாததாக சொல்லப்படுகிறது.