எந்த நேரத்தில பதவி காலியாகுமோ? மகா ஹோமம் நடத்தும் அதிமுகவினர்
சென்னை: அமைச்சர் பதவியோ, கட்சிப் பதவியோ பறிக்கப்பட்ட செய்தியை டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் பார்த்துதான் தெரிந்து கொள்கின்றனர் அதிமுகவினர்.
ராத்திரி உறங்கும் நேரத்திலும் கூட பதவி பறிபோகும் பயத்திலேயே தூக்கம்மின்றி தவிக்கின்றனர் அதிமுகவினர். பதவிக்காக பல அமைச்சர்களும், அதிமுகவினரும் 'ஷன்மத மந்த்ர ஸகித ஸ்ரீருத்ரவிதாய நக்ஷத்ர மண்டல சண்டிஹோமம்' நடத்துவதாக தகவல்கள் வெளியாகியள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றது முதல் மீண்டும் முதல்வராக அமரும் வரை அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் காவடி எடுத்தும், தீச்சட்டி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டிக்கொண்டனர்.
கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஜெயலலிதா. இதனையடுத்து பெரும்பாலான அமைச்சர்கள் தங்களின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
செந்தில் பாலாஜி
இந்த நிலையில் கடந்த வாரம் செந்தில்பாலாஜியின் பதவி பறிபோனது. இதற்குக் பலரும் பலவித காரணங்களை கூறி வருகின்றனர். ஆனாலும் அதிகம் கோவில் கோவிலாக சுத்தியவர் செந்தில் பாலாஜி என்பதால் அவரது பதவி நீக்கம் பரபரப்பை கிளப்பியது.
தோப்பு வெங்கடாசலம்
சுற்றுச்சூழல்துறை அமைச்சரான தோப்பு வெங்கடாச்சலம், முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களின் நலன்காத்திடவும், எத்தர்களின் சதி வலையை முறியடிக்கவும் வேண்டி ஒரு ஹோமத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
மாரியம்மன் கோவில் யாகம்
அந்த ஹோமத்திற்கு பெயர் 'ஷன்மத மந்த்ர ஸகித ஸ்ரீருத்ரவிதாய நக்ஷத்ர மண்டல சண்டிஹோமம்'. ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் இருக்கும் ஸ்ரீமாரியம்மன் கோவிலில்தான் இந்த யாகம் நடந்து கொண்டிருக்கிறது.
27 நாட்கள் யாகம்
மகம் நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் நட்சத்திரத்தில் முடிக்கும் வரை தொடர்ந்து 27 நாட்கள் இந்த யாகம் நடக்க இருக்கிறது. அண்மையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதவி பறிபோனதை தொடர்ந்து இப்போது இந்த ஹோமம் இன்னும் பிரசித்தி பெற்றிருக்கிறது. பதவி பயத்தால் பலரும் இந்த கோவிலுக்கு வரத்தொடங்கியிருக்கிறார்களாம்.