இன்ஸ்பெக்டரை அவன் இவன் என்று திமிராக பேசிய அதிமுக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாம்சனை தொலைபேசியில் அவன் இவன் என்றும் தொலைத்து விடுவேன், கொன்று விடுவேன் என்றும் அடாவடியாக, திமிராகப் பேசிய அதிமுக ஒன்றியச் செயலாளர் உதயக்குமார் என்பவர் மீது மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை நடவடிக்கைகளில் கட்சியினர் குறுக்கீடு இருக்காது, அவர்கள் காவல்துறையினரை மிரட்ட மாட்டார்கள், ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவது வழக்கம். ஆனால் களியக்காவிளை காவல் நிலைய இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஒரு அதிமுக பிரமுகர் பேசிய பேச்சைக் கேட்ட அத்தனை பேரும், அடக் கொடுமையே என்று கொதித்துப் போயுள்ளனர்.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழகத்தில் இன்னும் எத்தனை எத்தனை காவல்துறையினர் அதிமுகவினரால் இப்படி மிரட்டலுக்குள்ளானார்களோ என எண்ண வைத்துள்ளது இந்த ஆடியோப் பேச்சு.
களியக்காவிளை பஸ் நிலையம் அருகில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுகவினர் பேனர் வைத்து இருந்தனர். இதை களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சாம்சன் அகற்றினார்.
இதை அறிந்து கோபம் கொண்டார் மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலாளர் உதயகுமார். உடனே செல்லை எடுத்தார் இன்ஸ்பெக்டர் சாம்சனை போனில் தொடர்பு கொண்டார்.
ஏன் பேனரை எடுத்தீர்கள் என்று ஆரம்பித்து அப்படியே தாறுமாறாக பேசத் தொடங்கினார். அவன் இவன் என்றும் தொலைத்து விடுவேன் என்றும் ஒழித்து விடுவேன் என்றும் ஒரு ரவுடி ரேஞ்சுக்குப் பேசியுள்ளார்.
ஆரம்பத்தில் அவருக்கு மிகப் பொறுமையாக பதிலளித்து வந்த இன்ஸ்பெக்டர் சாம்சன், கடைசியில் சற்றே கோபமடைந்து சரி சரி ஸ்டேஷனுக்கு வா பேசிக் கொள்ளலாம் என்று பதிலளிக்கிறார்.
இவ்விவகாரம் வாட்ஸ்அப்பில் வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. அதிமுகவினர் எந்த அளவுக்கு காவல்துறையினரை மிரட்டுகின்றனர் என்பதையும் இந்த ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியது.
மேலும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் சூடான விவாதத்திற்குள்ளானது. பலரும் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக களம் குதித்தனர்.
இதுதான் அந்த ஆடியோ பேச்சு...
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சாம்சனிடம் மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் நேற்று விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து உதயகுமார் மீது சாம்சன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில், ஐபிசி 189 (செல்போனில் பேசி மிரட்டல்), 506 (1) (கொலை செய்வேன் என மிரட்டல்) உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.