முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைச் சொல்லி ரூ7 லட்சம் மோசடி! திடுக் தகவல்!!
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பணி வாங்கித் தருவதாக கூறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை பயன்படுத்தி ரூ7 லட்சம் மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றத்தை அடுத்து அவரது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். அதில். முதலமைச்சரின் உறவினர் எனக்கூறி தங்களுக்கு சொந்தமான அறக்கட்டளை நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி நகராட்சி ஆணையராக இருந்தவர் சுரேந்திரஷா. இவர் கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் பூந்தமல்லி நகராட்சிக்கே பணிக்கு வர உயர் அதிகாரிகள் மூலம் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதற்காக பூந்தமல்லி அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் ஜாவித் அகமது ஆகியோரை தொடர்புகொண்டுள்ளார்.
அவர்கள் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரான நாமக்கல்லைச் சேர்ந்த சரவணனை சந்தித்துள்ளார் சுரேந்திரஷா. இதனிடையே சுரேந்திரஷாவுக்கு பூந்தமல்லி நகராட்சியில் மீண்டும் ஆணையர் பதவி வாங்கித் தரும்படி ரவிச்சந்திரன், ஜாவித் அகமது ஆகியோரும் சரவணனிடம் கேட்டுக்கொண்டனர். இதற்காக ரூ 10 லட்சம் பேரம் பேசி ரூ 7 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி சுரேந்திரஷாவுக்கு எந்த பதவியும் வாங்கித் தரவில்லை. இதனால் பணத்தை கொடுத்து ஏமாந்த சுரேந்திரஷா காவல்துறையிடமும் புகார் கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் பெயரை சொல்லி மோசடி செய்த சம்பவம் பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி நகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு ரூ50 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லஞ்சமாக பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.