ஐயா ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல 'சின்னம்மா' ஜெயிலுக்கு போயும் 100 நாட்கள் நிறைவடைகிறது!
தமிழக முதல்வராக பழனிச்சாமி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைவதை கொண்டாடும் நேரத்தில் சசிகலா சிறை சென்ற 100 நாட்களில் நடந்த மாற்றங்களையும் பார்க்கலாம்.
சென்னை : முதல்வராக பழனிச்சாமி 100 நாட்களை நிறைவு செய்யும் இதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்றும் 100 நாட்கள் நிறைவடைகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா டிசம்பர் மாத இறுதியில் பதவியேற்றார். இதனையடுத்து அவரை முதல்வராக அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் வெடித்தெழுந்த ஓ.பன்னீர்செல்வத்தால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக 122 எம்எல்ஏக்களை கூவத்தூர் ரெசாட்டில் 13 நாட்கள் வைத்து அடை காத்தார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக இருந்த பிப்ரவரி 14ம் தேதியன்று முன் தினம் கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் டேரா போட்டு நிலா வெளிச்சத்தில் 'அம்மா' கதை சொல்லி அனைவர் மனதையும் கரைத்தார்.
சத்தியம் வாங்கிய சசி
இதனையடுத்து பிப்ரவரி 14ம் தேதி சசிகலா மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால் அப்செட்டானார் சசி. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதோடு தனக்கு யாரும் துரோகம் செய்யக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்றார்.
எல்லோரும் தலை(வர்)கள்
ஆனால் பதவியும் பவரும் ஆள் இருக்கும் வரை தான் என்பதைத் தெரியாதவர்களா அதிமுகவினர். ஜெ. இருந்த வரை அம்மா அம்மா என்று சொன்னவர்கள், அவரது இறப்பிற்கு பிறகு சின்னம்மா சின்னம்மா என கிளம்பினர். ஆனால் அவரும் சிறை போன பிறகு அண்ணன் தினகரன் என்று புகழ் பாடினர். தினகரனையும் டெல்லி போலீஸ் கவர்ந்து சென்றுவிட்டதால் இப்போது தலைமை இல்லாமல் ஆளாக்கு தலைவர்களாகவும் அதிகார மையமாகவும் ஆசையில் சுற்றி வருகின்றனர்.
தலைக்கு மேல் கத்தி
கட்சியைக் காப்பேன் என்று ஜெயலலிதா சமாதி முன்பு சத்தியம் செய்த சசிகலாவே கூவத்தூரில் செய்து கொடுத்த சத்தியம் என்னாச்சு என்று மாஜிக்கள் குடைந்து வருகின்றனர். சுழற்சி முறையில் பதவி என்று சசிகலா செய்த சத்தியம் இப்போது முதல்வர் பழனிச்சாமியின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி வருகிறது.
மனம் நொந்த சசி
சசிகலா சிறை சென்றதும் அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சென்று சந்திப்பதை வாடிக்கையாக வைத்தனர். ஆனால் இதற்கு பெங்களூர் சிறை நிர்வாகம் கண்டித்ததால் சின்னம்மாவை சந்திக்கும் தொண்டர் படை குறைந்தது. இந்த காலகட்டத்தில் உடல்நல பாதிப்புக்கு ஆளான சசிகலா, கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஒரு கட்டத்தில் மன நோய் பாதிப்பிற்கும் ஆளானதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
சின்னம்மாவிடம் சரணாகதி
இந்நிலையில் 100 நாளில் சின்னாபின்னமாகிப் போயுள்ள கட்சியில் சாட்டையை சூழற்ற சசிகலா மீண்டும் தேவை என்று அவரது மீண்டும் சந்தித்துள்ளனர். புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன், கருணாஸ் உள்ளிட்டோர் சசியை சந்தித்து கட்சியின் நிலைமை பற்றி புலம்பியுள்ளனர்.
என்னாச்சு மனு?
தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சசிகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்னும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே மனு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் தண்டனையில் மாற்றம் இருக்காது என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
நோ சான்ஸ்
ஏனெனில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் சசி உள்ளிட்ட மன்னார்குடி குடும்பம் ஏக போகமாக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதனால் ஜாமின் என்பதற்கு சான்ஸே இல்லை ஒரு வேளை அப்படி விடுவித்தால் அது மோசமான முன் உதாரணமாகிவிடும் என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.
முழ்கும் ஓட்டை கப்பல்
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடியென்றால் உரலுக்கு எல்லா பக்கமும் இடி என்பது போல சசிகலாவால் கட்சியையும் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியையும் காப்பாற்ற முடியவில்லை. இப்போது தலைவன் இல்லாத கட்சியாய் அரசியல் கடலில் தத்தளிக்கிறது பல ஓட்டைகளைக் கொண்டுள்ள அதிமுக என்னும் படகு.