தென் மாவட்டங்களில் திமுகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. !
சென்னை: மு.க.அழகிரி திமுகவில் இல்லாதது, அவர் முன்பு போல ஆக்டிவாக இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் எதிர்பாராத அளவில் தென் மாவட்டங்களில் நல்ல அறுவைடையைப் பார்த்துள்ளது அதிமுக. அழகிரி போனதால் திமுகவுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. காரணம், அதிமுகதான் தென் மாவட்டங்களில் அதிக இடங்களை தட்டிச் சென்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் திமுக 100 சதவீத வெற்றியை ஈட்டியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அதிலும் விளவங்கோடு தொகுதியில் டெபாசிட்டையும் அதிமுக பறி கொடுத்துள்ளது. மாறாக திமுக கூட்டணி இங்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
மற்றபடி பிற தென் மாவட்டங்களில் அதிமுகவின் கைதான் ஓங்கியிருந்தது. அதேசமயம், கணிசமான தொகுதிகளை திமுகவும் வென்றுள்ளது.
நெல்லை - தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் இரு கட்சிகளும் ஆளுக்குப் பாதியை வென்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6ல் 4 தொகுதிகளை அதிமுக வென்றுள்ளது. திருச்சுழி, திருச்செந்தூர் மட்டுமே திமுகவுக்குக் கிடைத்தது.
ராமநாதபுரம் - சிவகங்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் அதிமுகவுக்கே கிடைத்துள்ளன. முதுகளத்தூர் தொகுதியில் மட்டும் திமுக வென்றுள்ளது. ராமநாதபுரத்தில் மக்களின் கடும் அதிருப்தியால் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், கடந்த தேர்தலில் இந்த தொகுதியை வென்றவருமான ஜவாஹிருல்லா தோல்வியைத் தழுவ நேரிட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் மட்டும் அதிமுக வென்றது. காரைக்குடியில் காங்கிரஸும், திருப்பத்தூரில் திமுகவும் வென்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுகவுக்கு 8 கிடைத்தது. திமுகவுக்கு 2 மட்டுமே. மதுரை மத்திய தொகுதியும், பி. மூர்த்தி வென்ற தொகுதியும் மட்டுமே திமுகவுக்குக் கிடைத்தது.
திண்டுக்கல் - தேனி
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தமுறை 4 இடங்களை பெற்றுள்ளது திமுக. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்த தேனி, இம்முறையும் அதை நிரூபித்திருக்கிறது. கடந்த முறை ஒரு தொகுதியில் திமுக வென்றிருந்தது. இம்முறை அதையும் பறித்துக்கொண்டது அதிமுக. மொத்தம் உள்ள 5 தொகுதிகளையும் அதிமுகவே வென்றது.