டுவிட்டரில் கோரிக்கை விடுத்த உடனேயே தீர்வு காண முடிவு... ரஜினிக்கு அதிமுக அரசு பயந்துவிட்டதா?
ரஜினி டுவிட்டரில் கோரிக்கை விடுத்த இரண்டாம் நாளே தமிழக அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சு வார்த்தை குழு அமைத்துள்ளது. இது அதிமுக அரசு ரஜினிக்கு பயந்துவிட்டதா என்ற கேள்வியை
சென்னை: திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற கேளிக்கை வரியை ரத்து செய்யுங்கள் என ரஜினி கோரிக்கை விடுத்த இரண்டு நாட்களில் தமிழக அரசு பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல், மத்திய அரசு 'ஒரே தேசம் ஒரே வரி' என கூறி நாடுமுழுவதும் ஜிஎஸ்டி வரியை அமுல்படுத்தியது. இதற்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசு சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்து வருகிறது. இந்த வரிவிதிப்பே பெரும் சுமையாக இருக்கும் பொழுது, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் வரை சுமத்தப்படும் போது தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனக் கூறி, கேளிக்கை வரியை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர்.
ரஜினி டுவிட்டரில் கோரிக்கை
இந்நிலையில், 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருக்கும் ரஜினி காந்த், தன் டுவிட்டர் பக்கத்தில், 'திரையுலகை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்' என கேட்டுக்கொள்கிறேன் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு 'நோ ரெஸ்பான்ஸ்'
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ரஜினியின் கோரிக்கை விடுவதற்கு முன்பு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி, அதில் நல்ல முடிவு எட்டப்படவில்லை.
அதிமுக அரசு அஞ்சுகிறதா?
இந்நிலையில் ரஜினி டுவிட்டரில் கோரிக்கை விடுத்த இரண்டு நாட்களில் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவை எட்டும் வழியாக தமிழக அரசு பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளது. இது ரஜினிக்கு அதிமுக அரசு பயந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ரஜினி ஆலோசனை
ரஜினி ரசிகர்களைச் சந்தித்து அரசியலில் இறங்குவது குறித்து பேசி வருகிறார். மேலும் இதுகுறித்து அரசியல் தலைவர்களையும் ஊடக ஆசிரியர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.