அதிமுக அரசின் ஓராண்டு நிறைவு... 'அம்மா'வ மறந்துட்டீங்களேம்மா!!
அதிமுக அரசு ஒராண்டு நிறைவு செய்த நிலையில் தொடர் வெற்றிக்காக பாடுபட்ட ஜெயலலிதாவை வணங்க மறந்து விட்டார்களே என்று கட்சித் தொண்டர்கள் புகைச்சலை கிளப்பியுள்ளனர்.
சென்னை : அதிமுக அரசு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வித்திட்ட ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று இந்த நாளில் அஞ்சலி செலுத்தக் கூட ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை என்று தொண்டர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
அதிமுக அரசு 2012 முதல் 2016 வரை தமிழகத்தில் ஆட்சி செய்தது. இதன் தொடர்ச்சியாக 2016 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவிற்கு வெற்றியை பெற்றுத்தந்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் ஜெயலலிதா. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், டிசம்பர் மாதத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சமாதிக்கு கட்சியினரும் தொண்டர்களும் படையெடுப்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர்.
அதிலும் அதிமுக அமைச்சர்கள் அல்லது எம்எல்ஏக்கள் அம்மா சமாதிக்கு போகிறார்கள் என்றாலே ஏதோ பரபரப்பு காத்திருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம். முதன்முதலில் கடந்த டிசம்பர் மாதம் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது ஜெயலலிததா சமாதி முன் மொட்டையடித்து சசிகலா முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
சமாதி முன் வெடித்த பன்னீர்
தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் உதயகுமார் தொடர்ந்து சசிகலா முதல்வராக வேண்டும் என்று கூறியதால் மனம் நொந்த ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். பின்னர் பிப்ரவரி 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்த பின் எரிமலையாய் வெடித்தவர் என்னை நிர்பந்தித்த கையெழுத்து வாங்கியதாகச் சொன்னார்.
அட்டண்டன்ஸ் போட்ட முதல்வர்
இதற்கெல்லாம் அடுத்தபடியாக எடப்பாடி பிப்ரவரி 15ல் பதவியேற்றதும் தனது சகா அமைச்சர் கூட்டத்துடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் அதிமுகவினர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், அவரது நினைவிடத்திற்கு சென்று வருவதை வாடிக்கையாகவே வைத்திருந்ததாகக் கருதப்பட்டது.
பட்ஜெட் பெட்டியுடன் ஆசி
அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு ஒரு படி மேலே போய் நிதியமைச்சராக முதன்முதலில் எடப்பாடி அமைச்சரவையில் அறிவிக்கப்பட்ட நிதியமைச்சர் ஜெயக்குமார் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று பட்ஜெட் அறிக்கை அடங்கிய பெட்டியை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.
இது தானா உங்க விசுவாசம்
அடடா அமைச்சர்கள், முதல்வர், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் மறைந்தாலும் ஜெயலலிதாவின் மீது எத்தனை பற்று வைத்திருக்கின்றனர் என்று கட்சித் தொண்டர்கள் மெய் சிலிர்த்தனர். ஆனால் அதிமுக அரசு நிறைவடைந்து இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகும் நாளில், அடுத்த நான்கு ஆண்டுகளும் ஆட்சித் தொடரும் என்று கூறும் ஒரு அமைச்சர் கூட ஜெயலலிதா சமாதிக்கு சென்று அவர் வாங்கித் தந்த வெற்றிக்காக நன்றி செலுத்தவில்லை என்பது தான் கொடுமையான விஷயம்.
குமுறும் தொண்டர்கள்
ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் முதல்வர் பழனிச்சாமி அடுத்தகட்ட நடவடிக்கைகக்காக டெல்லி பறந்தவிட்டார். தங்கள் தொகுதியில் எதுவுமே செய்ய முடியவில்லை என்று போட்டி போட்டு எம்எல்ஏக்கள் முதல்வரை கோஷ்டி கோஷ்டியாக சந்தித்தனர். எதற்கெடுத்தாலும் அம்மா சமாதி முன் வந்தவர்கள் இன்று வரவேண்டியது கட்டாயமல்ல என்றாலும், இன்று ஜெயலலிதா சமாதிக்கும் சென்றிருக்கலாமே என்று குமுறுகின்றனர் கட்சி விசுவாசிகள். அதிகாரத்திற்காக போட்டிபோடுபவர்கள் அந்த வெற்றிக்கு காரணமான அம்மாவ மறந்துட்டாங்களே என புலம்புகிறார்கள் தொண்டர்கள்.