மோடி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. தமிழிசை மறுப்பு
பிரதமர் மோடி கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக கூறுவதை தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் கைகளுக்குள் தற்போது அதிமுக இருப்பதாக சிலர் கூறுவது உண்மையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அதிமுக-வின் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டன.
ஜெயலலிதா என்னும் ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கிய அதிமுக-வுக்கு தலைமையில்லை; வழி நடத்த ஆளில்லை என்று கருதும் பாஜக அதை அப்படியே கைப்பற்றிக் கொள்ள நினைக்கிறது என்ற விமர்சனம் பொது வெளியில் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தற்போது மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருவதாக சிலர் பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை பா.ஜ.க. மதிக்கிறது. மோடியின் கைகளுக்குள் தற்போது அதிமுக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை.
மேலும் தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் பா.ஜ.க. தலைவர்கள் யாரும் இல்லை என்று சிலர் கூறியிருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பா.ஜ.க. செல்வாக்கு அதிகரித்துதான் வருகிறது. அது சமீபத்தில் நடைபெற்ற 3 தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு அடுத்தப்படியாக பாஜக அதிக வாக்குகளை பெற்றுள்ளதே சான்று. இவ்வாறு தமிழிசை கூறினார்.