குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு "0"... ஒரு தொகுதியில் கூட வெல்லாதாம்: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: தென் மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் அதிமுக தனது இருப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அந்தக் கட்சிக்கு சுத்தமாக ஆதரவு அலை இல்லை என்று நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் இது கூறுகிறது.
இந்த மாவட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து சவாலாக இருப்பது பாஜகதான். அதிலும் விளவங்கோடு தொகுதியில் பாஜக வெல்லும் நிலையில் உள்ளது, பத்மநாபபுரம் தொகுதியில் பாஜகவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. அதிமுக 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமானது.
நாகர்கோவில்
நாகர்கோவில் தொகுதியில் திமுகவுக்கு 40.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுகவுக்கு 35.6 சதவீத ஆதரவு உள்ளது. பாஜக 11.5 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளது.
குளச்சல்
குளச்சல் தொகுதியில் திமுக அசாத்திய பலத்துடன் காணப்படுகிறது. அதாவது 55. 6 சதவீத ஆதரவுடன் உள்ளது. அதிமுகவுக்கு 26 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக 9.7 சதவீத ஆதரவுடன் உள்ளது.
கிள்ளியூர்
கிள்ளியூர் தொகுதியில் திமுகவுக்கு 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுக ஆதரவு 22.6 சதவீதமாகும். பாஜகவுக்கு 14 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி தொகுதியில் திமுகவுக்கு 44.1, அதிமுகவுக்கு 38.6 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு இங்கு 8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
விளவங்கோடு
விளவங்கோடு தொகுதியில் தற்போது விஜயதாரணி எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் மீண்டும் ஜெயிக்கும் வாய்ப்பு இல்லை. இங்கு பாஜக 29.3 சதவீத ஆதரவுடன் முன்னணியில் உள்ளது. 2வது இடத்தில் காங்கிரஸ் கட்சி 23 சதவீத ஆதரவுடன் உள்ளது. 3வது இடத்தில் அதிமுக 13.6 சதவீதத்துடன் உள்ளது. நான்காவது இடத்தில் தேமுதிக 11.9 சதவீத ஆதரவுடன் உள்ளது.
பத்மநாபபுரம்
பாஜகவுக்கு முதல் எம்.எல்.ஏவைக் கொடுத்த பெருமைக்குரிய பத்மநாபபுரத்தில் திமுகவுக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. அதாவது 51 சதவீத ஆதரவுடன் அது உள்ளது. 2வது இடம் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளது. அதாவது 17.1 சதவீதம். 3வது இடம் பாஜகவுக்கு, 11.8 சதவீதம். நான்காவது இடம் தேமுதிகவுக்கு 9.9 சதவீதம். ஐந்தாவது இடத்தில்தான் அதிமுக வருகிறது, அதாவது வெறும் 8 சதவீத ஆதரவுதான்.
அதிமுகவுக்கு ஏன் இந்த அவலம்?
அதிமுகவுக்கு இங்கு ஏன் இந்த கேவலமான நிலை என்று மூத்த பத்திரிகையாளர் ஷியாம் கருத்து தெரிவிக்கும்போது, உள்ளூர் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். அதை விட முக்கியமாக கேரளாவில் என்ன டிரண்ட் இருக்கிறதோ, அதுதான் எப்போதுமே கன்னியாகுமரி மாவட்டத்திலும் எதிரொலிக்கும். அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள திமுக அணி வெல்லும் நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.