லோக்சபா தேர்தல்.. .அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்...தேனியில் ஜெ. போட்டியிட ஓ.பி.எஸ். மனு!
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தேனி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை கழகத்தில் கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படுகின்றன. ரூ25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. முதல் விருப்ப மனுவை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாங்கினார். அவர் தமிழக முதல்வர் ஜெயலலலிதா, தேனி தொகுதியில் போட்டியிட பணம் கட்டி மனு கொடுத்துள்ளார்.
இதேபோல் திருச்சி, தென்சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட அதிமுக நிர்வாகிகள் தலைமை கழகத்தில் விருப்ப மனு கொடுத்து பணம் கட்டியுள்ளனர். இன்று பகல் நிலவரப்படி முதல்வர் ஜெயலலிதா தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 300 க்கும் மேற்பட்ட அதிமுக வினர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்களும் அக் கட்சியினரால் பெறப்பட்டுள்ளன.
இந்த விருப்ப மனுக்கள் வரும் 27-ந் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.