அதிமுக தொண்டர்களின் ஆதரவு யாருக்கு?... நக்கீரன் சர்வே முடிவுகள்
அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ் அணிக்குத்தான் என்று நக்கீரன் எடுத்த சர்வே முடிவுகளில் தெளிவாகியுள்ளது.
சென்னை: அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு இப்போதைக்கு ஓபிஎஸ் அணிக்கே என்று நக்கீரன் எடுத்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுக 2 அணிகளாக பிளவுப்பட்டன. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்பதாகும். இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் முடிவு அதிமுகவில் எந்த அணிக்கு மக்கள் செல்வாக்கு என்பதை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் நடக்கவே இல்லை. இதனால் யாருக்கு தொண்டர்கள், மக்கள், வாக்காளர்களின் ஆதரவு என்பது தெரியாமலேயே போய் விட்டது.
நக்கீரன் சர்வே
தொண்டர்களின் பலம் எங்களுக்குத்தான் ஓபிஎஸ்ஸும், தங்களுக்குத்தான் என்று எடப்பாடியும், உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் என்று தீபாவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நக்கீரன் எடுத்த ஒரு சர்வேயில் மக்கள் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
இந்த சர்வேயில் அதிமுகவின் வழக்கமான பலம் குறைந்து 25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதிமுகவின் இரு அணிகளில் எந்த அணிக்கு தொண்டர்கள் ஆதரவு என்று கருத்து கணிப்பின் போது 68 சதவீத தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ் அணிக்கே உள்ளது. மீதமுள்ள 32 சதவீதத்தில் ஏறத்தாழ 30 சதவீதம் பேர் சசிகலாவையும் ஆதரிக்கிறார்கள்.
இபிஎஸ்ஸும் அடங்கும்
இந்த 30 சதவீதம் பேரில் சசிகலா ஆதரவாளர்கள் மட்டும் கிடையாது. மாறாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் அடக்கம். எனவே இந்த ஆதரவும் கூட சசிகலாவுக்கு முழுமையானதாக கருத முடியாது.
தீபாவுக்கு 2 சதவீதம்
தீபாவுக்கும் இந்த கூட்டத்தில் ஒரு ஆதரவு நிலை உள்ளது. அதாவது 2 சதவீதம் பேர் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தொண்டர்கள் பலம் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும் என்பது வாக்காளர்களின் ஆதரவைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.