அதிமுக பல துண்டுகளாக சிதற வாய்ப்பு!
சென்னை: அதிமுக மீண்டும் இணையப் போவதாக பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் தினகரன் அதை அனுமதிப்பாரா என்பது சந்தேகம்தான். நிச்சயம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கவும் அவர் முயற்சிக்கலாம்.
தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது நிச்சயம் அதிமுக மேலும் சில துண்டுகளாக சிதறப் போவது உறுதியாக தெரிகிறது. நிச்சயம் தினகரன் தரப்பு சும்மா இருக்காது.
ஓ.பி.எஸ். தரப்பும், எடப்பாடி தரப்பும் கை கோர்த்தாலும் கூட தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து நிச்சயம் கட்சியை உடைப்பார் தினகரன். தனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக் கூடாது என்று அவர் முடிவெடுத்து விட்டால் நிச்சயம் கட்சி உடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு வேளை தினகரன் தரப்பை தன் பக்கம் இழுக்க எடப்பாடி தரப்போ அல்லது ஓ.பி.எஸ் தரப்போ முயற்சித்தாலும் கூட அவர்களுக்குரிய விலையை இவர்களால் தர முடியுமா என்பது சந்தேகம்தான். காரணம், தினகரன் தரப்பு பணத்தால் குளிப்பாட்டியதைப் போல நிச்சயம் இவர்களால் குளுமைப்படுத்த முடியாது என்பது உறுதி.
மேலும் இவர்களுக்கு வெளியிலிருந்து யாரேனும் ஆதரவு தருவதாக இருந்தாலும் கூட இந்த அளவுக்கு அவர்கள் செலவழிப்பார்களா என்பதும் சந்தேகம்தான். எனவே நிச்சயம் தினகரன் தரப்பு கட்சியை உடைத்து ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தவே முயலும்.
ஒரு வேளை அப்படி நடக்கும்போது திமுக அமைதியாக வேடிக்கை பார்த்து பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் மீண்டும் அசாதாரண, ஸ்திரமற்ற நிலைக்கு தமிழகத்தை தள்ளியுள்ளன இந்த உருப்படாமல் போன அதிமுக கோஷ்டிகள்.