"அம்மா 67"... வரலாறு காணாத பக்தி பரவசத்தில் அதிமுகவினர்.. பூஜை, அன்னதானம், அலகு குத்தல், மரம் நடல்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாளை அதிமுகவினர் இதுவரை இல்லாத அளவுக்கு பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர். கோவில்கள் முழுவதும் அதிமுகவினர் தலைகளாக காணப்பட்டது. அங்கப் பிரதட்சணம், அன்னதானம், சிறப்புப் பூஜைகள், தங்கத் தேர் இழுத்தல் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர்.
இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். ஆனால் அவர் முதல்வராக இல்லை. எனவே அதிமுகவினர் சோகத்தில் உள்ளனர். அவர் மீ்ண்டும் முதல்வராக வர வேண்டும் என்று வேண்டி விதம் விதமான பிரார்த்தனைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் உச்சமாக, நேற்று கராத்தே வீரர் ஹூசைனி சிலுவையில் அறைந்து கொண்டு அனைவரையும் அதிர வைத்து விட்டார்.
ஹூசைனியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. கிறிஸ்தவர்களை புண்படுத்தி விட்டார் ஹூசைனி என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. முட்டாள்தனமான செயல் இது என்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இருப்பினும் அதிமுகவினர் தங்களது ஜெயலலிதா விசுவாசத்தை எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டி கலக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று முழுவதும் தடபுடலான பிரார்த்தனை நிகழ்ச்சிகள் அரங்கேறின. சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் மதுரை ஆதினம் தலைமையில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஜமாத் மற்றும் கிறிஸ்தவ பேரவையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், கொடுங்கையூரில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையில், கழக அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்று மனமுருக வேண்டினர்.
தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில், திட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர் ஆலயத்தில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. பரசுராமன், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு 'அம்மா' என்ற எழுத்து வடிவில் ஆயிரத்து எட்டு நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கழக மாணவரணி சார்பில், வழிவிடு முருகன் கோவிலிலும், பரமக்குடி டி.ஈ.எல்.சி. தேவலயத்திலும் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைகளிலும் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், டாக்டர் எஸ். சுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 67 கிலோ கேக் வெட்டி மக்கள் முதல்வரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அலகு குத்தல்
மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பலர் அலகு குத்தி ஜெயலலிதாவுக்காக வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்கனவே செல்லூர் ராஜு மதுரையில் பெரும் பொருட் செலவில் பால் குடம், காவடி ஊர்வலம் நடத்தி மதுரை மக்களை "என்டர்டெய்ன்" செய்தவர் என்பது நினைவிருக்கலாம்.
இந்துசமய அறநிலையத் துறையும் கொண்டாட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி கைதாகி தற்போது ஜாமீனி்ல் விடுதலையாகி வீட்டோடு இருக்கும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் இன்று கொண்டாடியது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று முற்பகல் 11.15 மணிக்கு தமிழகத்தில் உள்ள 969 திருக்கோவில்களில் வில்வ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் அமைச்சர்கள், அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளனராம்.