எங்கம்மா சிங்கம்லே… அதிமுக தொண்டர்கள் உற்சாக 'குத்தாட்ட' கொண்டாட்டம்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக அறிவிக்க அறிவிக்க அதிமுக தலைமைக்கழகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை விழாக்கோலம் பூண்டுள்ளது. தட்டு நிறைய லட்டுக்களுடன் இப்போதே வெற்றிகனியை ருசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என அதிமுக தலைமைக்கழகம் களை கட்டியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை விட 10000 வாக்குகள் அதிகமாகவே பெற்று முன்னிலையில் பெற்று வருகிறார்.
மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை 5 சுற்று முடிவுகள்தான் முடிந்துள்ளன. சி.மகேந்திரனை விட இப்போதே 45000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் ஜெயலலிதா.
ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ள தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.
அம்மா வாழக... அம்மாவுக்கே வெற்றி... நிரந்தர முதல்வர் அம்மா... எங்கம்மா சிங்கம்லே என்றெல்லாம் குரல் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். ஆயிரம் வாலா சரவெடிகள் வெடிக்கப்படுகின்றன. பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள அதிமுக நிர்வாகிகள் தட்டு தட்டாக லட்டுகள், ஜாங்கிரிகளை குவிந்துள்ள தொண்டர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். அவ்வை சண்முகம் சாலையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர். அதிமுக மகளிர் அணி தொண்டர்கள் 'மெய் மறந்த' நிலையில் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
போயஸ் கார்டன் பகுதியில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மகளிர் அணியினர் தட்டு நிறைய லட்டுக்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உற்சாகமாக ஊட்டி மகிழ்ந்தனர்.