வாங்க பேசுவோம்... அவதூறா பேசினா பதிலடிதான் தருவோம் - ஜெயக்குமார்
இப்பவும் வாங்க பேசுவோம்... எங்களைப்பற்றி அவதூறு பேசினால் பதிலடிதான் தருவோம் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியினரை இப்போதும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம். அவர்கள் வந்தால் அமர்ந்து பேசலாம். அதை விட்டு விட்டு ஆளுக்கு ஒரு கருத்து சொன்னால் எப்படி நாங்களும் பதிலடி தருவோம் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் கட்சிக்கு திரும்ப வர வேண்டும் என்றார்.
இப்போதும் நாங்கள் பேச தயாராகவே இருக்கிறோம். அவர்கள் வரட்டும், வந்து பேசினால் கட்சியிலும், ஆட்சியிலும் உரிய மரியதை தர தயாராகவே இருக்கிறோம்.
ஆளுக்கு ஒரு கருத்து
அவர்கள்தான் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல மேலும் பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றே ஒவ்வொரு அதிமுக தொண்டரும் விரும்புகின்றனர்.
பதிலுக்கு பதில்
எதிர்கட்சியினர், திமுகவினர் யாராவது ஒரு கருத்தை சொன்னால் அதற்கு பதிலடி தருவோம். அதே போலத்தான் ஓபிஎஸ் அணியினர் கூறும் கருத்துக்கும் பதிலடி கொடுத்து வருகிறோம். எங்களைப் பற்றி அவதூறு பேசினால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்வோம் என்று கேட்டார் ஜெயக்குமார்.
இழுபறியில் பேச்சுவார்த்தை
இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்கவேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. இதனை ஏற்க ஈபிஎஸ் அணி மறுப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவி வருகிறது.
மதுசூதனன் குற்றச்சாட்டு
ஈபிஎஸ் அணியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்றும் மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என்றும் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார் இந்த நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு பேசியுள்ளார்.