அதிமுக கோஷ்டிகள் இடையே இன்று இணைப்பு பேச்சுவார்த்தை! சசி, தினகரன் உள்ளிட்டோர் டிஸ்மிஸ்?
சென்னை: அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிகள் இன்று இணைப்பு பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தூக்கின்றன. ஓபிஎஸ் கோஷ்டி நிபந்தனைப்படி சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விரட்டப்பட உள்ளனர்.
சசிகலாவின் அதிகார வெறியால் அதிமுக முதலில் அவரிடம் சிக்கியது. பின்னர் முதல்வர் நாற்காலியை குறித்து கூவத்தூர் கூத்துகளை அரங்கேற்றிப் பார்த்தார் சசிகலா.
இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை உறுதியானதால் சசிகலா சிறைக்குப் போனார். ஆனால் அண்ணன் மகன் தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக்கிவிட்டுத்தான் சசிகலா சிறைக்குப் போனார்.
ஆடிய ஆட்டம்தான் என்ன
தினகரனும் ஆடிய ஆட்டம்தான் என்ன... அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியேற்பை ஜோராக விழாவாக நடத்தினார். இதையடுத்து ஆர்கே தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளரானார்... அவரும் முதல்வர் கனவில் மிதந்தார். ஆனால் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தானது.
ஒதுக்கப்பட்ட தினகரன்
இதையடுத்து டெல்லியின் கடும் நெருக்கடியால் தற்போது ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைய முன்வந்துள்ளன. இதன் முதல் கட்டமாக் தினகரன், அதிமுகவை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டார். அவரும் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்து ஒதுங்கிவிட்டார்.
டெல்லி திஹாரை நோக்கி
அதிமுகவை விட்டு ஒதுங்கிய தினகரன் ஃபெரா வழக்குகள், தேர்தல் ஆணையத்துகே லஞ்சம் கொடுத்த வழக்குகள் என சென்னைக்கும் டெல்லிக்கும் பிஸியாக இருக்கிறார். இதில் டெல்லி போலீசார் எந்த நேரத்திலும் தினகரனை தூக்கி திஹார் சிறையிலடைக்கும் நிலைமை உள்ளது.
இன்று அதிகாரப்பூர்வ பேச்சு
இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்ததைக்கான குழுக்களை அமைத்துள்ளன. இக்குழுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
சசி, தினகரன் டிஸ்மிஸ்?
இப்பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவர் என்றே தெரிகிறது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட உள்ளன.
மீண்டும் ஓபிஎஸ் சிம்?
இன்றைய பேச்சுவார்த்தையில் ஆட்சி ஓபிஎஸ், கட்சி எடப்பாடி வசம் என்கிற நிலைப்பாடு முன்வைக்கப்படலாம். அமைச்சரவையில் விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு மாஃபா பாண்டியராஜன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.