திண்டுக்கல் மேயர் மருதராஜின் மகளுக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர் தீவிர பிரசாரம் !
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மருதராஜின் மகளுக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 17 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அதிமுகவினர் தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். மற்ற கட்சிகள் தற்போது வரை வேட்பாளர் பட்டியலை மட்டுமே வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கியதால் சிட்டிங் மேயர் மருதராஜ் போட்டியிடவில்லை. ஆனால் தமது மகன், மகள் மற்றும் தம்பி மருமகளுக்கு சீட் வாங்கிவிட்டார் மருதராஜ். இது திண்டுக்கல் அதிமுகவினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இருப்பினும் தனது மகள் பொன்முத்துவை 10வது வார்டில் நிறுத்தி மேயராக்க இருக்கிறார். அதுபோல் தனது மகன் வீரமார்பனை துணை மேயராக்க வேண்டும் என்பதற்காக எட்டாவது வார்டில் சீட் கொடுத்திருக்கிறார்
அதுபோல் தம்பி, மருமகள் நந்தினி ஆகியோருக்கும் சீட் வாங்கி கொடுத்துள்ளார். இப்படி குடும்ப வாரிசுகளுக்கு கவுன்சிலர் சீட்டுக்களை வாரி கொடுத்ததை கண்டு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மேயர் மருதராஜ் மகளை ஆதரித்து 10வது வார்டில் தேர்தல் பிரசாரம் செய்தார். அதுபோல் தனது ஆதரவாளரான 15து வார்டில் போட்டியிடும் பழக்கடை நாகராஜுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார். இதனிடையே மற்ற வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல் மேயரின் மகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.