அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதாக்கும்... அடித்துச் சொல்லும் ஐவர் அணி
சென்னை: குடிநீர் பஞ்சம், மதுவிலக்கு போராட்டம் என பிரச்சினைகளை கையில் எடுத்து எதிர்கட்சிகள் போராட்டம், ஆபரேசன் 234 என்ற இலக்கினை முன்வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டது அதிமுக. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருப்பதால், மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த ஆரம்பித்து விட்டனர்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களைப் பார்த்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, உற்சாக மிகுதியில் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மின்வெட்டு பிரச்சினையை முதல்வர் தீர்த்துவிட்டார் என்பதால் எதிர்கட்சிகள் மதுவிலக்குப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு போராடுவதாக போகும் இடமெங்கும் பேசி வருகிறார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
ஐவர் அணி உற்சாகம்
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஐவர் அணி என்று அதிமுகவினரால் குறிப்பிடப்படும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் கோட்டை
கூட்டத்தில் பேசிய நாமக்கல் மாவட்ட செயலாளரும், கரூர் மாவட்ட பொறுப்பாளரும், தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான பி.தங்கமணி தி.மு.க.விற்கு இனிமேல் எதிர்காலம் இல்லை என்றார். கரூர் மாவட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது என்றார்.
234 தொகுதிகளில் வெற்றி
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போன்று வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வெற்றி பெறும் தொகுதியை அடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கரூர் மாவட்டம் வெற்றி பெற்றது என்ற நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
இரட்டை வேடம்
எதிர்க்கட்சி, உதிரி கட்சிகள் போடும் இரட்டை வேடத்திற்கு பதில் அடி கொடுக்க வேண்டும். மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதி. டாஸ்மாக் கடையை வைகோ அடித்துள்ளார். 2009ம் ஆண்டு முதல் அதே இடத்தில் தான் அடிக்கப்பட்ட கடை இருக்கிறது. அப்போது வாரா, வாரம் அங்கு போன வைகோவுக்கு அந்த கடை தெரியவில்லையா? என்று கேட்டுள்ளார் நத்தம் விஸ்வநாதன்.
நத்தம் விஸ்வநாதன்
முதல்வர் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாதவர்கள், தற்போது மதுவிலக்கு என்பதை எடுத்துள்ளார்கள். 1971-ம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்தது கருணாநிதி. இன்று வேஷம் போடுகிறார். வைகோ, சைகோ போல் செயல்படுகிறார். கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த், வைகோ என்று யாராலும் முதல்வர் ஜெயலலிதாவை ஒன்றும் செய்ய முடியாது, என்றும் கூறியுள்ளார் நத்தம் விஸ்வநாதன்.
அசைக்க முடியாது
கூட்டத்தில் மைக் பிடித்த ஓ.பன்னீர் செல்வமோ, எம்.ஜி.ஆர். காலத்தில் 16 லட்சம் உறுப்பினர்கள் அ.தி.மு.க.வில் இருந்தனர். பொது செயலாளராக பதவி ஏற்ற முதல்வர் ஜெயலலிதா கடந்த 28 ஆண்டுகளில் கண்ட சோதனைகள், வேதனைகள் பல. அ.தி.மு.க. இயக்கத்தை அழிக்க கருணாநிதி உருவாக்கிய பல சதி வலைகளை முதல்வர் ஜெயலலிதா உடைத்து எறிந்தார். தற்போது அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தூய தொண்டர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத நிலையை முதல்வர் தற்போது உருவாக்கி தந்து உள்ளார் என்றார் உணர்ச்சி பொங்க.