எனக்கு ஏதாவது நடந்தால் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிதான் பொறுப்பு.. விபத்தில் சிக்கிய இளைஞர் வார்னிங்
எனக்கு ஏதாவது ஆன அதிமுக எம்எல்ஏதான் பொறுப்பு என்று எம்எல்ஏ பரமேஸ்வரியின் மகன்களின் இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த ராஜேஷ் கூறியுள்ளார்.
திருச்சி: அதிமுக எம்எல்ஏவின் மகன்களின் இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை கொடுக்கப்படாமல் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதனால் தனக்கு ஏதாவது ஆனால் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிதான் பொறுப்பு என்று பாதிக்கப்பட்ட ராஜேஷ் கூறியுள்ளார்.
திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த பரமேஸ்வரி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே 13 வயதிற்குள் இருக்கும் சிறுவர்கள். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது அய்யம்பாளையம் கிராமத்தில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஷ் என்பவர் மீது வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ், திடீரென சிகிச்சை முடிந்து விட்டது என்று கூறி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லை. அவரை வெளியேற்றும் போது முறையான மருத்துவ அறிக்கை எதுவும் மருத்துவர்கள் வழங்கவில்லை. மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட ராஜேஷ், நடக்க முடியாமல் உட்காரவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து ராஜேஷ் குடும்பத்தினர் மண்ணச்சநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் எம்எல்ஏ பரமேஸ்வரி சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட ராஜேஷ் குடும்பத்திடம் இருந்து வெற்றுத் தாளில் கையெழுத்து பெற்றுக் கொண்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக ராஜேஷ் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், உட்காரக் கூட முடியாமல் அவதிப்படும் தன்னை குணமடைவதற்கு முன்பே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும், தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் எதாவது நடந்தால் அதற்கு எம்எல்ஏ பரமேஸ்வரிதான் பொறுப்பு என்றும் பாதிக்கப்பட்ட ராஜேஷ் தெரிவித்துள்ளார்.