அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேலு மரணம்...புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் துயரம்!
மதுரை: உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேலு இன்று மரணம் அடைந்தார்.
சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் சீனிவேலு(65) போட்டியிட்டார். தனது வயதையும் பொருட்படுத்தாது அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது உழைப்பு வீண் போகாமல் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற கையோடு அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும் கடந்த 6 நாட்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
15வது சட்டசபை இன்று கூடி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்கும் நிலையில் சீனிவேலுவின் மரணம் அதிமுகவினரை கவலை அடைய வைத்துள்ளது.