கோர்ட் அனுமதியில்லை... எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
கரூர் : கரூர் மாவட்டம் குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் நீதிமன்றம் அனுமதி வழங்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் 19.1.2015-ல் அரசாணை வெளியிடப்பட்டு 2015 நவம்பர் மாதத்தில் ரூ.229.46 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்காக வாங்கல் குப்புச்சிப்பாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து 1.3.2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இடம் மாற்றப்பட்டு கரூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சணப்பிரட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எங்கும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.
இரு பகுதி மக்களும் தங்கள் பகுதியில் தான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதலில் அடிக்கல் நாட்டிய படி வாங்கல் குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக வாங்கல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் தானே நேரடியாக பங்கேற்பதாக அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்தார். போராட்டத்திற்கு அனுமதி கோரி போலீசில் செந்தில்பலாஜி புகார் மனு கொடுத்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோருக்கு ஒரு புகார் மனுவும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் செந்தில்பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காததால் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நீதிமன்ற அனுமதியுடன் விரைவில் அடுத்தக்கட்ட போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரச்னை தொடர்பாக முதலமைச்சருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர் தொகுதி எம்.பி தம்பிதுரை, தற்போதைய கரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் அதிக நெருக்கம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது