திகார் சிறையில் டிடிவி தினகரனை சந்தித்த அதிமுக எம்பி., எம்எல்ஏக்கள்- ஆலோசித்தது என்ன?
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திகார் சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னை: கட்சி நடவடிக்கைகளில் இருந்து நான் ஒதுக்கி விட்டேன். எனக்கென்று ஆதரவு எம்எல்ஏக்கள் யாருமில்லை என்று டிடிவி தினகரன் கூறினாலும் அவரது கட்டுப்பாட்டிலேயே கட்சி இருக்கிறது என்பது கண்கூடாக தெரிய வந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரனை அதிமுக எம்பி., எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ் அணியில் சில எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். தான் சிறைக்கு செல்லும் முன்பாக டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகர் சுகேஷ் மூலம் ரூ. 50 கோடி பேரம் பேசியதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திகார் சிறையில் தினகரன்
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 22ஆம்தேதி டிடிவி தினகரன் விசாரணைக்காக டெல்லி சென்றார். 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பாக தான் அதிமுகவின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறினார்.
ஜாமீன் கோரி மனு
கடந்த திங்கட்கிழமை அவரது 15 நாள் காவல் முடிந்தது. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் அவரது காவலை வருகிற 29ஆம்தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி டிடிவி தினகரன் நேற்று நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு
டிடிவி தினகரன் விசாரணை கைதியாக இருப்பதால் அவரை சந்திக்க வருபவர்களுக்கு தடையேதும் கிடையாது. தினகரனை அவரது ஆதரவாளர்கள் டெல்லி திகார் சிறையில் சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தினகரன் விவாதித்து வருகிறார்.
ஆதரவு எம்பி., எம்எல்ஏக்கள்
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், எஸ்.ஜி.சுப்பிரமணியன் மற்றும் அதிமுக எம்பிக்கள் விஜிலா சத்தியானந்த், மரகதம் ஆகிய ஐந்து பேரும் சந்தித்து பேசினார்கள். அப்போது மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சாமியும் உடன் சென்று இருந்தார்.
30 நிமிடங்கள் அவர்கள் பேசியதாக தெரிகிறது.
பிறந்தநாள் கொண்டாட்ட அதிர்வுகள்
திவாகரன் மகன் ஜெயானந் பிறந்தநாள் கொண்டாட்டம் அதிமுகவினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் அதிமுக அணிகளின் இணைப்பு முயற்சி தொடர்பான விஷயங்களை அவர்கள் பேசியதாக தெரிகிறது.
தினகரன் கட்டுப்பாட்டில் அதிமுக
டிடிவி தினகரன் எங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர். அவரை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. இக்கட்டான இந்த காலகட்டத்தில் நாங்கள் எப்படி அவரை ஒதுக்கி வைக்க முடியும்? என்று கேட்டார் அவரது ஆதரவு எம்எல்ஏ. என்னதான் ஒதுங்கி விட்டதாக கூறினாலும், அமைச்சர்கள் சிலர் டிடிவி தினகரனை ஒதுக்கி அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இணைப்பதில் சிக்கல்
திகார் ஜெயிலில் இருந்தாலும் தனது ஆதரவாளர்கள் மூலம் அவர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனையின் படியே பலரும் பேசி வருவதாலேயே அதிமுக இணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.