உனக்கென்ன ஆயிரம் கோடி சொத்து இருக்கு...? மிரட்டும் அதிமுக எம்.எல்.ஏக்களால் பீதியில் அமைச்சர்கள்!
அமைச்சர் பதவி, கோடிக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் அதிமுக எம்.எல்.ஏக்களால் அமைச்சர்கள் பலரும் பீதியில் உறைந்து போயுள்ளனராம்.
சென்னை: முதல்வர் எடப்பாடி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் சொந்த மாவட்ட அமைச்சர்களை ஒருமையில் விமர்சித்து கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைப் பார்த்துத்தான் இப்போது எடப்பாடி அரசின் அமைச்சர்கள் அலறுகிறார்கள். உள்கட்சி குழப்பத்தால் ஏற்பட்டுள்ள சூழல்களை, தங்களுக்கு சாதகமாக எம்.எல்.ஏக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அமைச்சர்களை மிகக் கடுமையாகவே மிரட்டுகின்றனர் என்கின்றனர் அ.தி.மு.கவினர். முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே, எம்.எல்.ஏக்களைத் தக்க வைப்பதில் மிகுந்த தடுமாற்றத்தில் இருந்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
எம்.எல்.ஏக்களுக்கு வசதி
ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏக்களைத் தவிர ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த 122 எம்.எல்.ஏக்களில் பலரும் சசிகலா அணி, தினகரன், திவாகரன் அணி என அதிர வைக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான வசதிகளை எந்தவித முகச் சுழிப்பும் இல்லாமல் செய்து கொடுத்து வந்தனர் அமைச்சர்கள்.
உண்மையான ஆதரவு என்ன?
அதையும், மீறி அமைச்சர் பதவிக்காகவும் கூடுதல் லாபத்துக்காகவும் தினகரனை சந்தித்து வருகின்றனர் சில எம்.எல்.ஏக்கள். இதனால், உண்மையில் ஆட்சிக்கான ஆதரவு எண்ணிக்கை எவ்வளவு? என்ற குழப்பம் கொங்கு பகுதியில் வலம் வருகிறது.
பெரம்பலூர் தமிழ்ச்செல்வன்
தொடக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்தது பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள்தான். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம், கட்சியில் முக்கியப் பதவி என எடப்பாடியை அந்த கோஷ்டியினர் அச்சுறுத்தினர்.
சமாதானப்படுத்திய செங்க்ஸ்
இவர்களை சமாதானப்படுத்த செங்கோட்டையனை அனுப்பினார் முதல்வர் எடப்பாடியார். அவரும், அம்மா கஷ்டப்பட்டு அமைத்த ஆட்சிக்கு எதிராக நீங்களே இப்படிச் செய்யலாமா? உங்களுக்கு எது தேவை என்றாலும், எடப்பாடி செய்து தருவார். இப்போதுள்ள சூழலில், ஒற்றுமைதான் நமது பலம் எனக் கூற, சீனியரே இறங்கி வரும்போது, நாம் ஏன் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் மனம் மாறினர்.
அமைச்சர் பதவி பேரம்
இதன்பிறகு, செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் தனி அணியைத் திரட்டி முரண்டு பிடித்தனர். அவர்களை அழைத்துப் பேசும் போதும், அமைச்சர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆணவ எம்.எல்.ஏக்கள்
தற்போது ஆட்சிக்கு எதிராக தினகரனை சந்திக்கச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடிய எம்.எல்.ஏக்கள் அனைவரும், கட்சியில் யாருக்கும் மரியாதை தருவதில்லை. நம் தயவால்தான் ஆட்சி நடக்கிறது என்ற ஆணவத்தில் வலம் வருகின்றனர்.
கெடு வைத்த எம்.எல்.ஏ.
ஓரிரு நாட்களுக்கு முன்பு சீனியர் அமைச்சரிடம் பேசிய ஜுனியர் எம்.எல்.ஏ ஒருவர், நான் கேட்டதை பண்ணித் தர முடியுமா? முடியாதா? உன்கிட்ட எதுவும் நடக்கலைன்னா, எடப்பாடியை பார்ப்பேன். என்னை நம்பி வந்தவனுக்கு என்ன பதில் சொல்றது? தொகுதிக்கு எதாவது கேட்டாலும் பண்ணித் தர்றதில்லை. உனக்கு ரெண்டு நாள்தான் டைம் என எச்சரித்துவிட்டுப் போயுள்ளார்.
மிரட்டிய எம்.எல்.ஏ.க்கள்
சென்னைக்கு அருகில் உள்ள மாவட்ட அமைச்சர் ஒருவருக்கு நேர்ந்த கதி வித்தியாசமானது. கடந்த சட்டசபை தேர்தலில், சசிகலாவிடம் பேசி, தனது ஆதரவாளர்கள் இருவருக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். அந்த இரண்டு பேருக்குமான தேர்தல் செலவுகளையும் அமைச்சர்தான் பார்த்தார். ஆனால், அந்த இருவரும் அமைச்சரை தினம்தினம் காய்ச்சி எடுக்கின்றனர். உனக்கென்ன ஆயிரம் கோடி சம்பாதிச்சுட்டே....பல தலைமுறைக்கு சொத்து இருக்கு. எங்களுக்கு என்ன இருக்கு? விசுவாசத்தையெல்லாம் நம்பிட்டிருந்தால், பிச்சையெடுக்க வேண்டியதுதான்' என நேருக்கு நேராக பேசிவிட்டனர். அமைச்சரோ, வீட்டுக்கு வெளியே போட வேண்டிய செருப்பை, வீட்டுக்குள்ள கொண்டு வந்தால், இப்படித்தான் அனுபவிக்கனும்' என பி.ஏக்களிடம் புலம்பி வருகிறார். இதேநிலைதான், பெரும்பாலான அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.