பெரிய மூட்டையுடன் 2 பேர்... சுற்றி வளைத்து மடக்கிய அதிகாரிகள்.. சிக்கியது அதிமுக மப்ளர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பறக்கும்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதிமுக மப்ளர்கள் சிக்கியது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவில் பிடிபட்டுள்ளது. இதில் சிலர் உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்பப் பெற்று சென்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் நள்ளிரவில் பழைய பஸ் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை சுரேஷ், சிறப்பு எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் வந்தது. இதில் பெரிய முட்டையுடன் இரண்டு பேர் இறங்கி ஆட்டோவில் ஏறினர். இதை கண்ட பறக்கும் படையினர் சந்தேகம் அடைந்து ஆட்டோவை மறித்தனர்.
இருவரும் சரியாக பதில் கூறாமல் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் அவர்களை மடக்கி மூட்டையை பறிமுதல் செய்தனர். அதை சோதனை செய்த போது அதில் அதிமுக கொடி கரை போட்ட மப்ளர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பூரில் இருந்து வந்த மற்றொரு பஸ்சில் அதிகாரிகள் சோதனையிட்டதில் அதிலும் அதிமுக மப்ளர்கள் இருந்தன. மொத்தம் 5100 மப்ளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.