அமாவாசையில் இணைந்து.. ஆவணியில் "டாப்"புக்கு போகுமா அதிமுக?
ஆவணி அமாவாசை நாளில் அதிமுக அணிகள் இணையும் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது.
சென்னை: ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வரும் என்று கூறுவார்கள். அமாவாசை நாளில் அதிமுக அணிகள் இணையப் போகின்றனவாம். பிளவு பட்ட அதிமுக டாப்புக்கு வரும் என்று தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.
அதிமுக எத்தனை அணிகளாக இருந்தால் என்ன தொண்டர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஒருவர் கூட எதிர்கட்சிக்கு செல்லவில்லை காரணம் ஜெயலலிதா அந்த அளவிற்கு அதிமுகவை எஃகு கோட்டையாக உருவாக்கி வைத்திருக்கிறார்.
என்னுடைய காலத்திற்குப் பிறகும் அதிமுக 200 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய ஜெயலலிதா கூறினார். அடுத்த மாதமே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார் ஜெயலலிதா, நள்ளிரவில் முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதியன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.
பிளவுபட்ட அதிமுக
பிப்ரவரி 7ஆம் தேதியன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்,தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறினார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் பக்கம் சில எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சென்றனர்.
சசிகலா குடும்பம்
122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைத்து வைத்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா. அதே கையோடு பெங்களூரு சிறைக்கு சென்றார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, தனக்கென ஒரு அணியை உருவாக்கவே சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
கட்சி, சின்னம் முடக்கம்
அதிமுக பிளவு பட்டதோடு கட்சி, சின்னம், கொடிக்கு இருவருமே மல்லுக்கட்டவே, தேர்தல் ஆணையம் கட்சி, சின்னம், கொடியை முடக்கியது. இருவருமே அதிமுக அம்மா, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்று கட்சிக்கு பெயர் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
அணிகள் இணைப்பு பேச்சு
டிடிவி தினகரன் திகார் சிறைக்கு போகவே, அணிகள் இணைப்பு பற்றி பேச்சு கிளம்பியது. ஆனால் அணிகளை இணைக்க சில நிபந்தனைகளை விதித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுவதுமாக ஓதுக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்றும் கோரினார் ஓபிஎஸ்.
டிடிவி தினகரன்
பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கியது. 7 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் இழுபறியால் குழு கலைக்கப்பட்டது. அணிகளை இணைக்க 60 நாட்கள் கெடு விதித்தார் தினகரன். ஆனால் அணிகள் இணையவில்லை. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கையில் இறங்கவே அணிகள் இணைப்பு அவசியம் என்று உணர்ந்தனர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர்.
தனித்தனியாக ஆலோசனை
அதிமுகவின் இரு அணியினரும் நேற்று தனித் தனியாக ஆலோசனை நடத்தி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை முடிவடையாமல் நீடித்தது.
பேச்சுவார்த்தை
ஓ.பி.எஸ். எடப்பாடி அணிகள் இணைவது உறுதி. இதில் 2 நாளில் நல்ல முடிவு வரும் என்று இரு அணி தலைவர்களுமே கூறி வருகின்றனர். இதுநாள்வரை எடப்பாடி பழனிச்சாமி அணியினர்தான் இணைப்பு பற்றி பேசினர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார்.
ஓபிஎஸ் உறுதி
இதுநாள் வரை அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், முதன்முறையாக, பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறியுள்ளார். இதன்மூலம் அணிகள் இணைவது உறுதியாகியுள்ளது.
ஓபிஎஸ் முடிவு
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும், அவர் அறிவிக்கும் முடிவுதான் இறுதியானது என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் எதுவும் புதிதாக கூறவில்லை. அணிகள் இணைப்பு உறுதிததான் என்று கூறி வருகின்றனர்.
தொண்டர்களின் விருப்பம்
அதிமுக அணிகள் இணைவதை தொண்டர்கள் விரும்புகிறார்கள். முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள். அதை செயல்படுத்தும் விதமாக இரு அணியினரும் நேற்று விவாதித்துள்ளனர். இதில் இழுபறி என்று சொல்வதைவிட முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அமாவாசையில் இணைப்பு
இது தேய்பிறை நாட்களாக இருப்பதால் திங்கட்கிழமை அமாவாசை வருகிறது. அந்த நாளில் இணைப்பு பற்றி இரு அணிகளும் அறிவிக்கலாம். ஆவணியில் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுக டாப்புக்கு வருமா பார்க்கலாம்.