இந்த 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை.. ஓ.பி.எஸ் கோஷ்டி விடாப்பிடி
அதிமுக எடப்பாடி அணியுடன் இணைய இரண்டு நிபந்தனைகள் தான் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் வைக்கப்படும் 2 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி கட்சி இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட முட்டுக்கட்டையால் நெருங்கி வந்த இருஅணிகளும் தற்போது தள்ளித் தள்ளிப் போகின்றன.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த நிர்வாகிகளான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவருமான முனுசாமி, எங்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 2 கோரிக்கைகளான ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம், சசி குடும்பம் கட்சியை விட்டு வெளியேறினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் கதையே வேறாக முதல்வர், பொதுச்செயலாளர் பதவி குறித்து இழுபறி நீடிப்பதே பேச்சுவார்த்தை தள்ளிப் போவதாக கட்சித் தொண்டர்க்ள் கருதுகின்றனர்.
இதனால் அதிமுகவின் இரு கோஷ்டி இணைப்புக்கான சுமூக பேச்சுவார்த்தை இன்று நடைபெறுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.