கொள்கையை குழப்பும் நட்புதான் மோடி-ஓபிஎஸ் நட்பு.. ஆவடி குமார் ஆவேசம்
மறைந்த ஜெயலலிதா மோடியுடன் கொண்டிருந்த நட்பு மதிப்பு மிக்கது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொண்டிருக்கும் நட்பு, ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையேயான நட்பு போன்று மதிப்பு மிக்க ஒன்றல்ல என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த 2 மாதத்திற்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் பல பரபரப்பு காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக முதல்வர் ஓபிஎஸ் மெரினாவில் போட்டுடைத்த உண்மைகள் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் அதிமுகவின் 'துரோகி' ஆகிவிட்டார். அவர் இப்படி எல்லாம் பேசுவதற்கு ஸ்டாலினுடன் இருக்கும் நட்புதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சிரித்து பேசியதே குற்றமானது. அதே போன்று, ஓ. பன்னீர்செல்வத்தை இயக்குவது பாஜகதான் என்றக் குற்றச்சாட்டும் பரவலாக அதிமுகவினரால் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு அதிமுகவின் தலைமை கழக பேச்சாளரும் செய்தித் தொடர்பாளருமான ஆவடி குமார் பேசும் போது, "அம்மாவுடன் மோடிக்கு இருந்த நட்பு மதிப்பிற்குரியது. ஆனால் ஓபிஎஸ் மோடியுடன் கொண்டுள்ள நட்பு கொள்கையை குழப்புவதற்காக ஏற்பட்டுள்ள நட்பு" என்று குற்றம்சாட்டினார்.