தினகரன் இன்று புனிதர்.. நாளை மாபெரும் மக்கள் தலைவர்..'துடைச்சுக்குவேன்' புகழ் சம்பத் வக்காலத்து
டிடிவி தினகரனின் கைது பாஜகவின் திட்டமிட்ட சதி என்று அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பார் என்று அந்தக் கட்சியின் முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 4 நாட்கள் விசாரணைக்குப் பிறகு செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தினகரனுடன் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஆஜர்
டெல்லி காவல்நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இவர்கள் 3 பேரும் இன்று பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் முக்கிய குற்றவாளி தினகரன் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் அவகாசம் கோருவர் என்று தெரிகிறது.
மேலும் 2 பேரிடம் விசாரணை
இந்த வழக்கில் பணப்பரிமாற்றத்திற்கு உதவியதாக சொல்லப்படும் ஹவாலா இடைத்தரகர் பைசல், வழக்கறிஞர் கோபி உள்ளிட்டோரிடமும் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
திட்டமிட்ட சதி
இந்நிலையில் டிடிவி தினகரன் கைது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தினகரன் கைது திட்டமிட்ட சதி என்றும், எந்த ஆதாரமுமே இல்லாததாலேயே தான் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறினார்.
மோசமான முன் உதாரணம்
தினகரனின் கைதால் அதிர்ச்சி அடையவில்லை. தினகரன் கைதுக்கு பின்னால் சதித்திட்டங்கள் உள்ளதாக நாஞ்சில் தெரிவித்தார். இந்த கைது மூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க. தினகரனை தெரியாது என சுகேஷே கூறி நிலையில் எப்படி கைது செய்யப்பட்டார் என்றும் வினவியுள்ளார்.
புனிதர்
பாஜகவின் பின்னணியிலேயே கைது நடவடிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தினகரன் இன்று இயேசுநாதரைப் போல புனிதராகியுள்ளதாகவும். இன்று புனிதரான தினகரன் நிச்சயம் நாளை மாபெரும் மக்கள் தலைவராக உருவெடுப்பார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
என்ன செய்வார் சம்பத்?
அதிமுக அம்மா அணியில் இருந்து தினகரன் வெளியேற்றப்பட்டாலும் தொடர்ந்து அவருக்கு வக்காலத்து வாங்கி வந்தவர் நாஞ்சில் சம்பத், எந்தக்காரணம் கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியோடு ஒருங்கிணைந்தாலும் அவர் வீட்டு வாசலில் போய் நிற்க மாட்டேன் என்றும் கூறினார். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சம்பத் கூறியிருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாறுபட்ட அரசியல் சூழலில் நாஞ்சில் சம்பத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.