கட்சி ஆரம்பிக்காமல் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்கிறார் தீபா... எப்படி?
இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தனது குறிக்கோள் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். அவர் வெறும் பேரவை மட்டுமே தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் தீபா.
ஜெயலலிதா பிறந்தநாளான இன்று அந்த அமைப்பிற்கான கட்சி, கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், இது கட்சியல்ல வெறும் அமைப்பு மட்டுமே என்று கூறினார்.
ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வேன் என்று கூறிய தீபா, தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழக மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன் என்று கூறிய தீபா, நிலையான ஆட்சியையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்குவோம் என்றும் கூறினார்.
இரட்டை இலையை மீட்பேன்
துரோகத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று கூறியா தீபா, அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களுடன் போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறினார்.
கட்சி தொடங்கவில்லை
இது கட்சியில்லையே எப்படி இரட்டை இலையை மீட்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தீபா, எனது தொண்டர்கள், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா
எம்ஜிஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்குவது போன்ற சின்னம் பொறித்த கறுப்பு சிவப்பு வர்ணத்திலான கொடியை அறிமுகம் செய்துள்ளார் தீபா. நடுவில் வெள்ளை உள்ளது. இதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் தீபாவிடம் சரியான பதில் இல்லை.
ஆர்.கே. நகரில் போட்டி
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று கூறிய தீபா தனது அமைப்பினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறினார்.
வேறு வேறு பாதை
ஓபிஎஸ் ஐ மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் என்றும் அவருடன் இணைந்து பயணிக்கும் திட்டம் இல்லை என்றும் தீபா கூறினார். ஓபிஎஸ் பாதை வேறு, தனது பாதை வேறு என்று கூறிய தீபா, இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கிறோம் என்று கூறினார்.
எப்படி மீட்பார் தீபா
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் கட்சி தொடங்கவில்லை என்றும் அமைப்புதான் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் இரட்டை இலையை மீட்பேன் என்றும் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.