கட்சிக்காக தியாகம் செய்த சசிகலா தீண்டத்தகாதவரா?...குண்டு கல்யாணம் குய்யோ முறையோ புலம்பல்
சசிகலா, தினகரன் ஏன் கட்சியை விட்டு விலக வேண்டும் எதிர்கோஷமிடுபவர்களின் பவுசு என்னவென்று எங்களுக்குத் தெரியும் என்று அதிமுக பேச்சாளர் குண்டு கல்யாணம் கூறியுள்ளார்.
சென்னை : சசிகலா விட்டுக் கொடுத்து கட்சியில் வந்தவர்கள் எல்லாம் இன்று அவரை எதிர்த்து கோஷமிடுவதாக அதிமுக பேச்சாளரும் பிரபல நகைச்சுவை நடிகருமான குண்டுகல்யாணம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நடைபெற்றும் வரும் உட்கட்சி மோதல் குறித்து குண்டுகல்யாணம் முகநூலில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். சுமார் 12 நிமிடங்கள் வரை குண்டு கல்யாணம் பேசும் அந்த வீடியோவில் எதிர்கோஷ்டியினரை செமையாக வாரியுள்ளார். குண்டு கல்யாணம் பேச்சு:
அதிமுகவில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும் இந்த கழகம் யாரால் வளர்ந்தது, காப்பாற்றப்பட்டது என்று. ஒரு சிலர் ஏதோ சசிகலாவை தீண்டத்தகாதவர் போலவும் தினகரனை கட்சியை விட்டு ஒதுங்கிக் கொண்டால் நல்லது என்றும் பேசுகின்றனர். அவர்கள் ஏன் ஒதுங்க வேண்டும் எதற்கு ஒதுங்க வேண்டும்.
மக்களை குழப்பும் கோஷ்டிகள்
சசிகலாவை எதிர்ப்பவர்களின் பவுசு எங்களுக்குத் தெரியாதா? அம்மாவின் படத்தை எரித்தவர்கள் தானே நீங்கள், அதற்கான ஆதாரமும், பதிவும் இருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறீர்கள் தொண்டர்களையும் மக்களையும் குழப்புவது தானே உங்களின் நோக்கம். ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாங்கள் 73 நாட்கள் வெளியே உட்கார்ந்து பூஜை செய்து கொண்டிருந்தோம்.
கெஞ்சியது நீங்கள் தானே
மருத்துவமனையிலேயே இருந்து சசிகலா வீட்டிற்கு கூட செல்லாமல் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டார். வேறு யாரும் அப்படி பார்த்துக் கொள்ள முடியாது, மறைந்த ஜெயலலிதாவே தாய் ஸ்தானத்தில் இருந்து சசிகலா பார்த்துக் கொள்வதாகக் கூறினார். எல்லாம் தெரிந்தும் பொய் சொன்னவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறான். பொதுச்செயலாளராக சசிகலா இல்லை என்று இன்று கூறுபவர்கள் அன்று நீங்கள் தானே சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பொதுச்செயலாளராக வலியுறுத்தினீர்கள் என்றார்.
ஆடு, குதிரை கதை
மேலும் ஆட்சி யாரால் இருக்கிறது, கட்சி யாரால் உடையாமல் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா, மக்களுக்குத் தெரியும். அதிமுகவில் சசிகலாவின் செயல்பாடுகளை விளக்கி குண்டுகல்யாணம் ஆடு,குதிரை கதையை உதாரணமாக சொன்னார். சசிகலாவால் கட்சிக்கு வந்தவர்கள் இன்று அவரையே அழித்து கட்சியை நடத்த நினைப்பதாக குட்டிக் கதையில் குமுறினார் குண்டு கல்யாணம். உடல்நலமில்லாமல் இருந்த குதிரைக்கு உத்வேகம் தந்த ஆட்டை, குதிரை எழுந்து நடக்க, ஓடத் தொடங்கியதும் ஆட்டை வெட்டி பிரியாணி போட்டார்களாம் இது தான் கதையின் நீதி.
தியாகம் செய்து விட்டு சிறையில்
அத்துடன் சசிகலா சரியான நேரத்தில் முடிவு எடுக்காமல் இருந்திருந்தால் கட்சியும் ஆட்சியும் இருந்திருக்காது. சசி இல்லாவிட்டால் எடப்பாடி முதல்வராக ஆகியிருக்க முடியுமா. இத்தனை தியாகத்தை செய்து விட்டு தான் பொய்வழக்கில் சசிகலா கட்சிக்காகவும், சின்னத்தை பெற முயற்சித்த பொய் வழக்கில் தினகரன் டெல்லி சிறையிலும் அடைக்கப்பட்டார்கள் என்று வெடித்து எழுந்து ஒரே புலம்பல்.
சசி சரிசெய்வார்
சசிகலாவை ஆதரிப்பவர்கள் மட்டுமே அதிமுகவினர் என்ற ரீதியில் பேசும் குண்டு கல்யாணம் இறுதியில் பேசி முடித்தது தான் ஹைலைட்டான விஷயம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த கட்சி 100 ஆண்டும், ஆட்சி 4 ஆண்டும் இருக்க வேண்டும் என்றால் அனைவரும் அமைதியாக சசிகலாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். விரைவில் சசிகலா வெளிவந்து அனைத்தையும் சரி செய்து விடுவார் என்று நீலிக்கண்ணீர் விட்டுள்ளார் குண்டு கல்யாணம்.