அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு... எதற்காகத் தெரியுமா?
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேரறிவாளனின் பரோல் விவகாரம் குறித்து பேச ஆதரவு தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.
சென்னை : அதிமுகவின் ஆதரவு எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் பேரறிவாளர் பரோல் விவகாரம் குறித்து பேசுவதற்கு ஆதரவு கோரினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்திருந்தார். ஆனால் மத்திய அரசின் சட்டவிதிமுறை காரணமாக பரோல் தர முடியாது என்று சிறைத்துறை மறுத்து விட்டது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களை கவனித்துக் கொள்ள மகனை பரோலில் விட வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்து வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக ஆதரவு மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முவேந்தர் புலிப்படை உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாளன் பரோல் விவகாரம் குறித்து அவையில் பேச திமுகவின் ஆதரவையும் அதிமுக ஆதரவு பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறையில் அவரை சந்தித்த இவர்கள், சட்டசபையில் பேரறிவாளன் குறித்து பேசும் போது ஆதரவு அளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.