அதிமுகவின் கயிறு மோடியின் கையில்… பயந்து கிடக்கிறார்கள் அமைச்சர்கள்… திருநாவுக்கரசர் அட்டாக்
அதிமுகவின் கயிறு மோடியின் கையில் உள்ளது. அதனால் அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவின் பிடியில் தமிழகத்தின் அதிமுக சிக்கி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 53வது நினைவு நாளான இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அணைக்கட்டுக்களையும், பல்வேறு தொழிற்சாலைகளையும் உருவாக்கியவர் நேரு. ஒப்பற்றத் தலைவரான அவரால் இந்தியா எழுச்சி பெற்றுள்ளது.
மோடியின் பிடியில்..
தமிழக அரசு வேறல்ல. பாஜக அரசு வேறல்ல. மோடியின் பிடியில் அதிமுக அரசு பயந்து கிடக்கிறது. அதிமுகவை மோடி உடைத்து அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறார். அதில் பலன் இல்லை என்று தெரிந்த உடன் அதனை சேர்க்க மீண்டும் பாஜக முயற்சி மேற்கொண்டது.
ஜனாதிபதி தேர்தல்
இரு அணிகளில் உள்ளவர்களில் யார் முதல்வர், யார் பொதுச் செயலாளர் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்போது அதற்கு சாத்தியமும் இல்லை. இந்தக் குழப்படியை மோடி பயன்படுத்த நினைக்கிறார்கள்.
50 ஆயிரம் வாக்குகள்
ஓபிஎஸ்ஸிடம் 10 ஆயிரம் வாக்குகள் உள்ளன. பழனிச்சாமியிடம் 40 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த 50 ஆயிரம் வாக்குகளை பயன்படுத்த பாஜக மிரட்டி வருகிறது.
பொம்மலாட்டம்
நீட் தேர்வு, வறட்சி நிவாரணம் என எதற்கும் அதிமுக அரசு வலுவாக குரல் கொடுப்பதில்லை. மோடியின் கையில் அதிமுகவின் கயிறு உள்ளது. இங்கு பொம்மலாட்ட அரசு நடைபெற்று வருகிறது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.