டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்னைக்கு படையெடுக்கும் தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள்
அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வாக தென்மாவட்ட நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நெல்லை: தினகரன் ஆதரவு தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திடீரென சென்னைக்கு படையெடுத்து செல்வதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
முன்னாள் அதிமுக தலைமை செயலாளரும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியை இணைக்க எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் 60 நாட்களுக்குள் இணைய வேண்டும். இல்லையென்றால் நானே களத்தில் குதித்து கட்சி பணியாற்றுவேன் என தினகரன் அறிவித்தார். அதன்படி வரும் 5ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வருவதை முறியடிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு தினகரனுக்கே இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து இரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சென்னைக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர் கூறுகையில், அதிமுகவின் பொது செயலாளராக சசிகலாவும், துணை செயலாளராக தினகரனும் தான் இருப்பார்கள். வேறு யாரும் வர முடியாது என்று தெரிவித்தார்.