ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்! #Jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த தகவல் பரவியதை தொடர்ந்து நள்ளிரவில் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் துவங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன், சென்னை மேயர் சைதை துரைச்சாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொண்டர்கள் அந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், காய்ச்சல் காரணமாகவும் உடலில் நீர்சத்து குறைந்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போது நலமாக உள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின்னர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பக்கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.