கிரானைட் குவாரி மோசடி: மேலூர் பகுதியில் சகாயம் குழுவினர் ஆய்வு - 2 லாரிகள் பறிமுதல்
மேலூர்: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ள சகாயம் குழுவினர் பெர்மிட் இல்லாமல் கிரானைட் கற்களை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 7 கட்ட விசாரணை நடத்திய அவர், பல்வேறு கிரானைட் குவாரிகளை பார்வையிட்டு முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆளில்லா விமானம் மூலம்
இந்த நிலையில் சகாயத்தின் உதவியாளர் ஆல்பர்ட், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை ஆகியோர் இன்று, மேலூர் அருகே உள்ள கீழையூர், சி.சி.கண்மாய், இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்காக ஆளில்லா விமான கண்காணிப்பு காமிராவை பறக்க விட்டு, ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். எவ்வளவு கற்கள் அனுமதி இன்றி வெட்டி எடுக்கப்பட்டன என்பது குறித்து தகவல்கள் சேகரித்தனர்.
பாறைகள் உடைப்பு
இதற்கிடையே, மேலூர் அருகில் உள்ள திருவாதவூர் ஓவா மலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கிரானைட் பகுதிக்கு நேற்று காலை அதிகாரிகள் ஆய்விற்கு சென்றனர்.
அங்கு கிரானைட் கற்களை சிலர் கடப்பாறை, சுத்தியல் போன்றவற்றால் உடைத்து கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கனிம வளத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பி.ஆர்.பி குவாரியில்
பின்னர் கீழையூரில் பிஆர்பி நிறுவனத்திற்கு சொந்தமான குவாரியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு பணி துவங்கியது. சகாயத்தின் தனி உதவியாளர் ஆல்பர்ட், வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை ஆகியோர் தலைமையில் மதுரை தனியார் நிறுவன ஊழியர்கள் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
லாரிகள் பறிமுதல்
மதுரா கிரானைட், பி.ஆர்.பி. கிரானைட், எஸ்.எஸ். கிரானைட் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் மேலூரில், சகாயம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக செய்ததில், ஒரு லாரியின் பெர்மிட் முடிந்தபின்னரும், பெர்மிட் புதுப்பிக்கப்படாமல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு லாரியில் உள்ள கிரானைட் கற்களை அளவிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.