ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் திமுகவுக்கும் குறி வைக்கும் டெல்லி?
அதிமுகவை தொடர்ந்து திமுகவிலும் சலசலப்புகளை மும்முரமாக்க டெல்லி முயற்சிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுகவைப் போல திமுகவையும் சிதைப்பதற்கான வியூகங்களில் பாஜக முழுவீச்சில் களமிறங்கும் என்கின்றன டெல்லி தகவல்கள். இதை எதிர்கொள்ள திமுக தலைமையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில்தான் கால் வைக்க முடியாத ஒரு மாநிலமாக இருந்து வருகிறது. அதிமுக, திமுக ஆகியவற்றின் வாக்கு வலிமையாக இருக்கிறது.
அதிமுக
இதனால் தமிழகத்தில் பத்தோடு பதினொன்றாக மட்டுமே பாஜக இருந்து வருகிறது. தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுகவை மறைமுகமாக பாஜக கபளீகரம் செய்துவிட்டது. என்னதான் பல அணிகளாக அது சிதைந்தாலும் ஒட்டுமொத்தமாக பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது.
கருணாநிதி
அதேநேரத்தில் இப்படி கபளீகரம் செய்தாலும் அதிமுக தொண்டர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம்தான். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
கழகங்கள் இல்லாத தமிழகம்
இதை பயன்படுத்திக் கொண்டு கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற கோஷத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. அதிமுகவை சிதைத்து கபளீகரம் செய்த பாஜக அடுத்ததாக திமுகவுக்கும் குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு குறி
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் திமுகவில் பிரளயத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக வியூகங்கள் வகுத்துள்ளதாம். ஆனால் இதை எதிர்பார்த்தே திமுக தலைமையும் காத்திருக்கிறதாம்.
அக்னி பரீட்சை
திமுகவில் பிளவுகளை ஏற்படுத்துவது என்பது டெல்லிக்கு ஒன்றும் புதிதல்ல.. காலம் காலமாக திமுகவை அசைத்துப் பார்க்கவே டெல்லி எப்போதும் முயற்சிக்கும் என்பதால் இந்த அக்னி பரீட்சைக்கும் திமுக தயாராகி கொண்டிருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.