அப்பல்லோ விசிட்டுக்கு பின் அதிமுகவில் மீண்டும் தலையெடுத்த நத்தம் விஸ்வநாதன்!
திண்டுக்கல்: ம்முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பின்னர் அதிமுகவில் மீண்டும் தலையெடுக்க தொடங்கியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக செல்வாக்குடன் திகழ்ந்த ஐவரணியில் ஒருவர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்ட அதிமுகவையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ஆனால் காலச்சக்கரம் சுழன்றது... அதிமுக ஆட்சியின் கடைசி காலத்தில் அவருக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா சாட்டையை சுழற்றினார்... இதனால் நத்தம் விஸ்வநாதனின் செல்வாக்கு கோட்டை சரிந்து மண்ணாகியது.
பத்தோடு பதினொன்றாக...
சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் நத்தத்தால் ஓரங்கட்டப்பட்ட சீனிவாசன் அமைச்சரானார். மேயர் மருதராஜ் மாவட்ட செயலரானார்.. நத்தத்தின் இருப்பு கேள்விக்குறியானது. இதனால் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் பத்தோடு பதினொன்றாக நானும் இருக்கிறேன் என்ற ரீதியில் வலம் வந்து கொண்டிருந்தார்.
டம்மியாக்கப்பட்ட நத்தம்
ஒருகட்டத்தில் திடீரென நத்தத்துக்கு அதிமுகவில் புதிய பதவிகள் கிடைத்தன. ஆனால் வருமானவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டுகளில் நத்தம் விஸ்வநாதன் கார்டனில் மறைத்த பல விஷயங்கள் அம்பலமாகிப் போனது. இதனால் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து கட்சி பதவிகள் மீண்டும் பறிக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டார்.
அழைக்க கூடாது
அத்துடன் அதிமுக நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்கவே கூடாது எனவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அப்பல்லோவில் முகாமிட்டிருந்தனர்.
அப்பல்லோவுக்கு பின் ரீ எண்ட்ரி
அப்படி முகாமிட்டவர்களில் நத்தம் விஸ்வநாதனும் ஒருவர்.. அப்பல்லோவுக்கு சென்றுவிட்டு அவர் திரும்பியபோதே இனி நத்தம் விஸ்வநாதனையும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கலாம் என சென்னையில் இருந்து உத்தரவு போயுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நத்தம் விஸ்வநாதனும் ஆஜராகி வருகிறார்.