ஆறுகுட்டியை போல அடுத்தடுத்து ஈபிஎஸ் அணிக்கு தாவ தயாராகும் எம்எல்ஏக்கள்- தவிக்கும் ஓபிஎஸ்
சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் ஈபிஎஸ் அணிக்கு தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ் அணியில் இருந்து முதல் விக்கெட்டாக ஆறுகுட்டி எம்எல்ஏ அணி மாறியுள்ளார். இந்த விக்கெட்டை வீழ்த்தியது கொங்கு மண்டல அமைச்சர்கள் என்றும் பரபரக்கப்படுகின்றன.
பிப்ரவரி 7ஆம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார் ஓபிஎஸ். அன்று நள்ளிரவு முதலே தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின.
பிப்ரவரி 8ஆம் தேதி அதிகாலையில் மக்கள் கூட்டம் ஓபிஎஸ் வீடு முன்பு கூடியது. முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தவர் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி. அடுத்தடுத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்தனர். 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.
சசிகலா சிறைக்கு சென்றதை அடுத்து கட்சியை வழி நடத்தினார் டிடிவி தினகரன். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் ஈபிஎஸ், அமைச்சர்கள் வழி நடத்தி வருகின்றனர்.
ஆட்சிக்கு ஆபத்தில்லை
சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்குவதாக கூறியதை அடுத்து சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் சென்றுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் அணி அணியாக பிரிந்து கிடந்தாலும் ஆட்சிக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
அணி மாறிய ஆறுகுட்டி
இதனிடையே ஓபிஎஸ் அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கோவையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக ஆறுக்குட்டி எம்எல்ஏ கூறினார். ஓபிஎஸ் அணியில் இருந்து ஈபிஎஸ் அணிக்கு சென்றார்.
கடும் அதிர்ச்சி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, ஆறுக்குட்டி அவராகவே வந்தார், தற்போது அவராகவே வெளியேறி விட்டார் என்று கூறி விட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று விலகி ஈபிஎஸ் அணியில் இணைந்தது ஓபிஎஸ் அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாவத்தயார் நிலையில் ஐவர்
ஆறுகுட்டி எம்எல்ஏ போல மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி பற்றி ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று அவசர ஆலோசனை நடைபெற்றது.
வீழ்த்தும் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சரான முன்னணி எம்எல்ஏ மற்றும் ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் விலக இருக்கும் தகவல் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தெரிய வந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான காய்களை நகர்த்துவதே கொங்கு மண்டல அமைச்சர்கள்தானாம்.
பணம் படுத்தும் பாடு
ஓபிஎஸ்க்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை நம்பியே பலரும் வந்தனர். அணிகள் இணைந்தாலாவது சின்னம் கிடைக்கும் நன்மைகள் நடக்கும் என்று நம்பினார்கள். ஆனால் கட்சியில் உள்ள மாஜிக்களால் அணிகள் இணைவது கனவாகி வருகிறது. இதனாலேயே பல எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.
என்ன செய்யலாம்
எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருக்கும் போதே டிமாண்ட் பேசி இணைந்து விட்டால் நல்லது. அதற்கு பதிலாக அனைத்து எம்எல்ஏக்களையும் அவர்கள் பக்கம் இழுத்த பின்னர் தனியாக போய் இணைவது சரியாக வருமா என்றும் யோசித்து வருகிறாராம் ஓபிஎஸ். டெல்லியில் இதற்கு ஒரு முடிவு எடுத்து விட்டே சென்னை திரும்புவார் ஓபிஎஸ் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்புக் கட்டத்தை எட்டியுள்ளது.