6 நாளில் 8 குழந்தைகள் பலி... தர்மபுரியைத் தொடர்ந்து சேலம் மருத்துவமனையிலும் சோகம்!
சேலம்: தர்மபுரி அரசு மருத்துவமனையில் நான்கைந்து நாட்களில் 12 குழந்தைகள் பலியான விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலையே இன்னும் ஓயாத நிலையில், சேலம் மருத்துவமனையில் கடந்த ஆறு நாட்களில் எட்டு குழந்தைகள் உயிர் இழந்ததாக தெரிய வந்துள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி முதல் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்ட குழந்தைகளில் 12 பேர் உயிரிழந்தார்கள். இக்குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தர்மபுரியைத் தொடர்ந்து சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து உயிர் இழந்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12-ம் தேதி விழுப்புரம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி- அலமேலு தம்பதியரின் ஆண் சிசுவும், கடந்த 13-ம் தேதி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவரியூர் பகுதியைச் சேர்ந்த பழனி- பாப்பா தம்பதியரின் பெண் குழந்தை, அதே நாளில் சேலம் மாவட்டம் அனுப்பூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்- கலா தம்பதியரின் ஆண் குழந்தையும் உயிர் இழந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 14-ம் தேதி நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் - சரோஜா தம்பதியரின் பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. 15-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த குமார்- செல்வி தம்பதியரின் ஆண் குழந்தை, 16-ம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்- ராதா தம்பதியரின் ஒரு வார ஆண் குழந்தை, அதே நாளில் நாமக்கல் மாவட்டம் நீர்முள்ளிகுட்டைப் பகுதியைச் சேர்ந்த பொன்மலை- மஞ்சு தம்பதியரின் பெண் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்- தங்கமணி தம்பதியரின் பெண் குழந்தையையும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களில் அங்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
சேலம் மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளை வைக்கும் இன்குபேட்டர் கருவியில் மூன்று முதல் நான்கு குழந்தைகள் வைக்கப்படுவதாகவும், இதனால் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் மற்ற குழந்தைக்கும் தொற்றி குழந்தை இறப்பு ஏற்படுவதாகவும் அங்குள்ள பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.